×

நடிகர் சரத்பாபு மரணம்

ஐதராபாத்: பிரபல நடிகர் சரத்பாபு, உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். ஆந்திராவில் பிறந்து வளர்ந்த சரத்பாபு, கடந்த 1973ல் தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்யம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பிறகு 1977ல் கே.பாலசந்தர் இயக்கிய ‘பட்டினப்பிரவேசம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவருக்கு 72 வயது ஆகிறது. இதனால், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு ‘செப்சிஸ்’ என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. ‘செப்சிஸ்’ என்பது சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை கடுமையாகப் பாதிக்கும் நோயாகும்.

முதலில் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத்பாபு, பிறகு ஐதராபாத் தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சரத்பாபு நேற்று மரணம் அடைந்தார். தெலுங்கில் கடைசியாக பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ படத்திலும், தமிழில் பாபி சிம்ஹாவின் ‘வசந்தமுல்லை’ படத்திலும் சரத்பாபு நடித்திருந்தார். ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘முள்ளும் மலரும்’, வேலைக்காரன்’, ‘அண்ணாமலை’. ‘முத்து’ போன்ற படங்களில் சரத்பாபுவின் குணச்சித்திர நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

‘முள்ளும் மலரும்’ படத்தில் இளையராஜா இசையில், பாலு மகேந்திரா ஒளிப்பதிவில் ஷோபாவும், சரத்பாபுவும் பங்கேற்று நடித்த ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’ என்ற பாடல் காட்சியை யாராலும் மறக்க முடியாது. சரத்பாபு தனது 22வது வயதில் நடிகை ரமாபிரபா என்பவரை திருமணம் செய்தார். சில வருடங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்த அவர், பிறகு வில்லன் நடிகர் என்.எம்.நம்பியாரின் மகள் சினேகலதா என்பவரை திருமணம் செய்தார். அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவரை சரத்பாபு விவாகரத்து செய்துவிட்டார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

* நடிகர் சரத்பாபு மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நடிகர் சரத்பாபு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற ஏராளமான திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் இன்றும் தமிழ் ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நடிகர் சரத்பாபு மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sarathbabu ,Hyderabad ,Andhra Pradesh ,K. Balachandar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி