ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசு பள்ளிகளில் மூன்றாவது மொழிப்பாடமாக உருதுக்கு பதிலாக சமஸ்கிருதத்தை பயிற்றுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் கல்வித்துறை சமீபத்தில் ஜெய்ப்பூரில் உள்ள மகாத்மா காந்தி அரசு பள்ளிக்கு மூன்றாவது மொழியாக உருதுமொழியை வழங்கும் வகுப்புக்களை நிறுத்திவிட்டு சமஸ்கிருதத்தை விருப்பப்பாடமாக அறிமுகப்படுத்த உத்தரவு பிறப்பித்து இருந்தது. சில நாட்களுக்கு பின், பிகானரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும் உருது மொழியை மாற்றுவதற்கு இதேபோன்ற உத்தரவு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிராக அதிருப்தி அதிகரித்து வருகின்றது. ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் ஜவஹர் சிங், ‘‘காங்கிரஸ் அரசு சமஸ்கிருத ஆசிரியர்களை நீக்கிவிட்டு உருது ஆசிரியர்களை நியமித்தது. இப்போது எங்களுக்கு உருது தெரியாது. உருது ஆசிரியர்கள் போலி பட்டங்களுடன் வேலைகளைப் பெற்றுள்ளனர்” என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் கருத்துக்கள் ஆதாரமற்றது மற்றும் பொறுப்பற்றது என்று ராஜஸ்தான் உருது ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எந்த விசாரணையும் இல்லாமல் உருது ஆசிரியர்களை போலி என்று கூறுவது சரியல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்.
The post ராஜஸ்தானில் அரசு பள்ளிகளில் உருதுக்கு பதிலாக சமஸ்கிருதம் appeared first on Dinakaran.