சென்னை: பாஜக தமிழ்நாட்டு மக்களிடம் அடி வாங்கும்போது குறுக்கே புகுந்து காப்பாற்றும் வேலையை அதிமுக செய்கிறது என திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; பாஜக எப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் அடி வாங்குகிறதோ, அப்போதெல்லாம் குறுக்கே புகுந்து காப்பாற்றும் வேலையைச் செய்வது இங்கிருக்கும் அதிமுக அடிமைகள். ஒன்றிய அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளை இவர்களும் எதிர்க்க மாட்டார்கள். எதிர்க்கும் திமுகவுடன் துணையாகவும் நிற்க மாட்டார்கள்.
PMSHRI திட்டம் குறித்து முடிவெடுப்பதற்கு மாநில அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது, அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்பதுதான் தலைமைச் செயலாளரின் கடிதத்தில் இருக்கும் செய்தி. ஆனால் அதை மறைத்துவிட்டு, பாஜக பரப்பும் அதே பொய்யை அடிமைகளும் பரப்புகிறார்கள்.
இருமொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்த தத்துவார்த்த நிலைப்பாடும் அதிமுகவால் முன்னெடுக்கப்பட்டது அல்ல. அத்தனையுமே திமுகவால் முன்னெடுக்கப்பட்டு மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டவை. அவற்றின் மீது கைவைத்தால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியது வரும் என்பதற்காக தாங்களும் அந்த நிலைப்பாட்டில் இருப்பதுபோல் நடிக்கும் கட்சிதான் அதிமுக. அவர்களுக்கென்று கொள்கை நிலைப்பாடுகளோ, போராட்ட வரலாறோ இல்லை.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை ஒன்றிய பாஜக அரசு எவ்வளவு பறித்தாலும், கூச்சமின்றி அவர்களின் காலில் விழுந்து, ஏலம் எடுத்து வைத்துள்ள தங்களது கட்சிப் பொறுப்பை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அதிமுகவின் நிரந்தரக் கொள்கை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பாஜக தமிழ்நாட்டு மக்களிடம் அடி வாங்கும்போது குறுக்கே புகுந்து காப்பாற்றும் வேலையை செய்கிறது அதிமுக: எம்.எம்.அப்துல்லா! appeared first on Dinakaran.
