×

காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூ விற்பனை விறுவிறு

அண்ணாநகர்: உலக அளவில் காதலர் தினம் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இன்று காலை ஓசூர், பெங்களூர், ஊட்டி ஆகிய பகுதியிலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகளவில் ரோஜா பூக்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. வழக்கமான நாட்களில் 5 முதல் 7 டன் வரை ரோஜா பூக்கள் கொண்டுவரப்படும். தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் வரத்து அதிகரித்து 10 டன் ரோஜா பூக்கள் இறக்கப்பட்டுள்ளன. கடந்த வருடத்தை ஒப்பிடும்போது பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு தாஜ்மஹால் ரக ரோஜா பூக்கள் 200 முதல் 400 ரூபாய்க்கும், நோபிள்ஸ் பிங்க் ரக ரோஜா 180 முதல் 350 ரூபாய்க்கும், ராக்ஸ்டார் ஆரஞ்சு ரோஜா 150 முதல் 300 ரூபாய்க்கும், ரேட் ரோஸ் 200 முதல் 450க்கும், ஜப்பூரா 40 முதல் 100 ரூபாய்க்கும், கலர்ரோஸ் 150 முதல் 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ”நாளை மறுநாள் காதலர் தினம் என்பதால், பெங்களூர், ஓசூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் குவிக்கப் பட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் பூக்களின் விலை உயரும். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு வியாபாரம் சூடுபிடித்துள்ளது” என்றார்.

The post காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூ விற்பனை விறுவிறு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Valentine's Day ,Annanagar ,Koyambedu market ,Hosur ,Bangalore ,Ooty ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு காய்கறி பூ, பழம், உணவு தானிய...