சவுதி: இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கான விசா விதிகளை சவுதி அரேபியா மாற்றி அமைத்துள்ளது. இந்த நாடுகளுக்கு ஒரே முறை பயணிக்கக்கூடிய ‘சிங்கிள் என்ட்ரி விசா’ மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளது. கடந்த 2024ல் சவுதிக்கு செல்லும் ஹஜ் பயணிகளில், அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத ஹஜ் பயணிகள் எண்ணிக்கை அதிகமானதால் கூட்ட நெரிசல் மற்றும் கடுமையான வெப்பத்தால் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சவுதி அரேபியா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா உட்பட பாகிஸ்தான், எகிப்து, இந்தோனேசியா, எத்தியோப்பியா, அல்ஜீரியா, நைஜீரியா, ஈராக், ஜோர்டான், மொராக்கோ, சூடான், துனீசியா, ஏமன் ஆகிய நாடுகளுக்கு புதிய விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதன்படி ஒரே முறை பயணிக்கக்கூடிய ‘சிங்கிள் என்ட்ரி விசா’ மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி பயணிகளுக்கு 30 நாட்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படும். விசா நீட்டிப்பு அல்லது பல முறை பயணிக்க அனுமதி இல்லை. இந்த புதிய விதிகள் சுற்றுலா, தொழில் மற்றும் குடும்ப சந்திப்பு விசாக்களுக்கு பொருந்தும். மேலும் ஹஜ், உம்ரா, தூதரகம் மற்றும் குடியுரிமை விசாக்களுக்கு மாற்றம் இல்லை. அனுமதியின்றி ஹஜ் பயணம் செய்வதை கட்டுப்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விசா கட்டுப்பாடு தற்காலிகமானது என்றாலும், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம். எனவே பயணிகள் முன்கூட்டியே விசாவுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கடந்தாண்டு நடந்த துயரங்களால் ‘சிங்கிள் என்ட்ரி விசா’ மட்டுமே: சவுதி அரேபியா அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.