விருதுநகர்: பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் மனு அளித்தனர். மனுவில், வெம்பக்கோட்டை நேருஜி நகரில் குடியிருக்கும் பட்டியலின சுகாதார பணி செய்யும் அருந்ததியர் மக்களின் குழந்தைகள் 10க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர்.
தமிழக அரசால் பட்டியலின மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த 5 ஆண்டுகளாக பெற்று வழங்கவில்லை. வருடந்தோறும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து வருகிறோம். இன்று வரை படிப்பு உதவித்தொகை குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை.
பலமுறை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தும் பயனில்லை. மேலும் பள்ளியில் அருந்ததியர் சமூக மாணவ, மாணவியர் படிக்கவே இல்லை என உண்மைக்கு புறம்பான தகவலை அதிகாரிகளுக்கு தெரிவித்து வந்துள்ளார். அரசின் உதவித்தொகை கிடைக்கவிடாமல் தடுத்து வரும் தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசின் உதவித்தொகையை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
The post பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு உதவித்தொகை வேண்டும் பெற்றோர்கள் மனு appeared first on Dinakaran.