சென்னை: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்து காணொலி வாயிலாக நிருபர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: புதிய பாம்பன் பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவுற்றுள்ளது. நாட்டின் தலைசிறந்த பொறியாளர்கள் மூலம் புதிய பாம்பன் பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலம் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் பிரசித்திபெற்ற ரயில்வே பாலம் பாம்பனில் உள்ளது. தனுஷ்கோடி – ராமேஸ்வரம் திட்டம் வேண்டாம் என கூறியது தமிழ்நாடு அரசுதான். ஒன்றிய அரசு அந்த திட்டத்தை கைவிடவில்லை.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஜூலை முதல் நவம்பர் வரை ரூ.40,000 கோடி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 50 நமோ பாரத் ரயில்கள், 100 அம்ரித் பாரத் ரயில்கள், 200 வந்தே பாரத் ரயில்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. குறுகிய தொலைவுக்குள் இருக்கும் நகரங்களுக்கு இடையே நமோ பாரத் ரயில்கள் ஏ.சி மற்றும் ஏ.சி அல்லாத ரயில்பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும். தமிழ்நாடுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு இனிமையான மாநிலம், தமிழ் கிளாசிக்கல் மொழி. இவ்வாறு அவர் கூறினார்.
* தனுஷ்கோடி திட்டம்
கர்நாடக மாநிலத்திற்கு ரூ.7564 கோடி, கேரளாவுக்கு ரூ.3042 கோடி, தமிழ்நாட்டில் ரயில்வேக்கு ரூ.6626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பாம்பன் பாலம் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ரயில்வே திட்டங்களை செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தனுஷ்கோடி ரயில்வே திட்டம் ஒன்றிய அரசு தரப்பில் உயிர்ப்புடன்தான் உள்ளது என்றார்.
The post குறுகிய தொலைவுக்குள் இருக்கும் நகரங்களுக்கு இடையே நமோ பாரத் ஏசி ரயில்கள்: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.
