×

வனத்துறை ஊழியர்களை அடித்து, மிரட்டி மாமூல் கறக்கும் அதிகாரியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘இலை கட்சி விவகாரம் ஏதும் இருக்கா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘இது கட்சி விவகாரம் இல்லை.. மாஜி அமைச்சர் தன்னை காசு அடிக்க விடாமல் பழி வாங்கிவிட்டார் என புலம்பும் ஒரு அதிகாரியை பற்றியது..’’ என சிரித்தார்.  ‘‘ஓ… இது வேறயா… யாராம் அந்த அதிகாரி..’’ என்றார் பீட்டர் மாமா   ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் ஆவின் சேர்மனாக பழனி ஆண்டவர் பெயரை கொண்டவர் இருந்து வந்தார். பதவி ஏற்கும்போது பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த பதவியை தக்க வைத்துக் கொண்டாராம். ஆனால் பதவியில் இருந்த மூன்று ஆண்டுகளில் ஒத்த பைசா கூட சம்பாதிக்க முடியவில்லை என்று ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து வருகிறாராம். நூற்றுக்கு மேற்பட்ட காலிப்பணியிடம் இருந்தும் அதனை பூர்த்தி செய்வதற்கு 7 லகரம் வரை துறை அதிகாரிக்கு மாமூல் கொடுத்து ஓகே பெற்று வந்தாராம்.  ஆனால் அப்போதைய உள்ளூர் மாஜி அமைச்சர் பச்சைக்கொடி காட்டாமல் அதற்கு தடை போட்டாராம். கவுரவத்திற்கு மட்டுமே தலைவர், இன்னோவா கார் மட்டும் கொடுத்த நிலையில் ஒத்த பைசா கூட சம்பாதிக்கவில்லை, மாஜி அமைச்சர் வழிவிடவில்லை என்று ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து வருகிறாராம்.  ஏற்கனவே இலை கட்சியில் இருந்து மாஜி அமைச்சரை எதிர்த்து வந்தவர், வேறு கட்சிக்கு சென்றுவிட்டார். அவருடன் இவர் இருந்ததால், மாஜி அமைச்சர் வச்சு செய்து விட்டதாக புலம்பி வருகிறாராம். இதற்கு மாஜி அமைச்சரும், அவருடைய சகோதரரும் பழி வாங்கிவிட்டதாக கதறி வருகிறாராம்.  கட்சியில் இருந்த பலரும் சம்பாதித்த நிலையில் முக்கிய பதவியை கொடுத்து, ஆனால் சம்பாதிக்க விடாமல் மாஜி அமைச்சர் ‘ப’ வாங்கி விட்டதாக இலை கட்சியினரிடம் புலம்பி வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘அணி அணியாய் கட்சி தாவிக்கொண்டிருக்கிறார்களாமே இலை கட்சியினர்..’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘வெயிலூர்  மாவட்டத்தில் இலை கட்சியினர் ஆளும்கட்சிக்கு தாவி வருவது தொடர்கதையாகுது.  சட்டமன்ற தேர்தலிலும், தொடர்ந்து வந்த உள்ளாட்சி தேர்தலிலும் இலை கட்சி  மண்ணை கவ்வியதால் அந்த கட்சியினர் ரொம்பவே விரக்தியாகிட்டாங்களாம். தலைமையே  ரெண்டு இலையா பிரிந்து கிடக்குது. அதோட எதிர்க்கட்சினு சொல்லக்கூடிய  வகையிலும் ரெட்டை தலைமையோட செயல்பாடு இல்லை என்ற மனநிலைக்கு இலை கட்சி நிர்வாகிங்க  வந்துட்டாங்களாம். அதனால் முதலில் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிபெற்ற  ஒன்றிரண்டு பேரும் ஆளும்கட்சிக்கு வந்துக்கிட்டு இருக்காங்க. சமீபத்துல  வெயிலூர் பக்கத்துல இருக்கிற ‘பென்’ பேரூராட்சியில ஒட்டுமொத்தமாக எல்லா இலை  கட்சி நிர்வாகிங்களும் அங்கிருந்து விலகி ஆளும்கட்சியில இணைஞ்சிட்டாங்க. அவங்களை தொடர்ந்து  கணியான ஒன்றியம் மொத்தமும் இப்ப இலை கட்சியை விட்டு விலகும் முடிவுல  இருக்கிறார்களாம். இவர்களுடன் குக்கர் கட்சி நிர்வாகிகளும் இணைய வர  விருப்பம் தெரிவிச்சு இருக்கிறாங்களாம். காரணம், அந்த ஒன்றியத்துல ராகம்  பாடும் தலைவரோட இம்சை தாள முடியலையாம். 30 வருஷமா அவருதான் அந்த பதவியில  கோலோச்சுறாராம். மேலும், மாவட்டத்துல வீரமானவரோட செயல்பாடும், வேலானவரு  செயல்பாடும் ஒண்ணுமேயில்லையாம். இது எல்லாமும்தான் வெயிலூர் மாவட்டத்தில்  இலையை காலி செய்யுதாம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘இடைத்தரகர் கன்ட்ரோலில் இன்ஸ்பெக்டரு இருக்காராமே..’’  ‘‘முட்டை  மாவட்டத்தின் ராசியான ஊரில், இடைத்தரகராக வந்தவர் போலீஸ் வாகனத்தை  ஓட்டுவதும், அவரை அழைத்துக் கொண்டு லேடி இன்ஸ்பெக்டர் ஆய்வுக்கு செல்வதும்  சர்ச்சையை கிளப்பி இருக்காராம். ராசியான புரத்து மகளிர் ஸ்டேஷன்  இன்ஸ்பெக்டருக்கும், சர்ச்சைகளுக்கும் அப்படி ஒரு பொருத்தமாம்.  ஸ்டேஷனுக்கு வரும் போக்சோ உள்ளிட்ட எந்த வழக்கையும், கட்டப்பஞ்சாயத்து  முறையில் டீலிங் செய்யுறாங்க, இங்கே நடவடிக்கை இல்லாமல் உயரதிகாரியின்  கவனத்திற்கு கொண்டு செல்வோரை, அழைத்து எரிந்து விழுறாங்க என்றெல்லாம்  சர்ச்சைகள் இவங்க மேல தொடர்ந்து வந்துகிட்டே இருக்கு. இப்படிப்பட்ட  நிலையில் தான், கொரோனா ஊரடங்கு வந்ததாம். அப்போது பழைய வாகனங்களை ஏலம்  எடுக்க வந்த இடைத்தரகர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இப்போது அவரை  அழைத்து, போலீஸ் வாகனத்தை ஓட்டச்சொல்லி, இன்ஸ் ரவுண்ட் போவது புதிய  சர்ச்சையாக வெடிச்சிருக்காம். இத காரணமாக வச்சிகிட்டு அந்த தரகரும்,  போலீஸ்காரங்க பேரை சொல்லி வசூலில் பிரிச்சு மேயுறாராம். கிட்டத்தட்ட  ஸ்டேஷனே இப்போது அந்த இடைத்தரகரின் கன்ட்ரோலில் தான் இருக்கு என்று  புலம்புகின்றனர் பணியாற்றும் காக்கிகள்’’ என்றார் விக்கியானந்தா.   ‘‘மாமூல் கொடுக்காவிட்டால் அடி-உதைனு இறங்குறாராமே ஒரு அதிகாரி..’’ என ஆச்சர்யத்தோடு கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஈரோடு  மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பாதுகாவலர் பதவியில் ஒரு  அதிகாரி உள்ளார். இவர், கரன்சி குவிப்பதில் படு கில்லாடியாக இருக்கிறார்.  மாமூல் கொடுக்க மறுக்கும் வன ஊழியர்களை மிரட்டுவதுடன், தாக்குதல்  நடவடிக்கையிலும் ஈடுபடுகிறாராம். பல விரும்ப தகாத நடவடிக்கைகளில்  ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆசனூர் வனத்துறை தங்கும்  விடுதியில், பழங்குடியின வகுப்பை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலரை  தாக்கியுள்ளார். சத்தியமங்கலம் சந்தன கிடங்கில் வனத்துறை ஊழியர் ஒருவரை  தாக்கியதுடன், அவரை கட்டாயப்படுத்தி மாமூல் கறந்துள்ளார். மாமூல் கொடுக்க  மறுத்த இரு வனச்சரகர்களை, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளார். இவர்,  மதுரை உள்ளிட்ட பிற இடங்களில் பணிபுரிந்தபோதும் இதேபோல் அடாவடியில்  ஈடுபட்டுள்ளார். இவரது கட்டுப்பாட்டில் உள்ள வன எல்லைக்குள் யானை, சிறுத்தை  உள்ளிட்ட விலங்குகள் இறந்துபோனால், அதை பிரேத பரிசோதனை செய்து, அதன்  அறிக்கையை மேலிடத்துக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு விடுகிறார். அறிக்கை  அடிப்படையில், மேலதிகாரிகள் இவர் மீது நடவடிக்கை எடுத்துவிடக்கூடாது  என்பதால் இந்த யுக்தியை கையாள்கிறார். இவரது டார்ச்சர் தாங்காமல், 28  வயதான வனஊழியர் பிரபாகர் என்பவர் அந்தியூர் வனப்பகுதியில் பூச்சிக்கொல்லி  மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர், மதுரை நாகமலையை  சேர்ந்தவர். இந்த வழக்கை, தற்கொலை வழக்கு என அப்படியே மூடி மறைத்து  விட்டார் இந்த அதிகாரி.  தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு,  முதுமலை,  ஆனைமலை, திருநெல்வேலி போன்ற பகுதிகளில், இவரது நிலையில் உள்ள  பல  அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். ஆனால், இவர் மட்டும்  இங்கேயே  நங்கூரம் பாய்ச்சியுள்ளார்’’ என்றார் விக்கியானந்தா. …

Tags : Forest Department ,Miratti Mamool ,Peter ,Minister ,Maji ,
× RELATED ஒசூர் அருகே சிறுத்தை நடமாட்டம்...