திருவண்ணாமலை, ஜன. 23: திருவண்ணாமலை அருகே பைக் மோதி மூதாட்டி பலியான விபத்து வழக்கில் வாலிபருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட் தீர்ப்பளித்தது. திருவண்ணாமலை அடுத்த கீழ் அணைக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா(75). இவர் கடந்த 15.1.2022 அன்று திருவண்ணாமலை – மணலூர்பேட்டை சாலையில் கீழ் அணைக்கரை கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த வேளையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் சுந்தர்ராஜ் (35)என்பவர், நடந்து சென்ற சரோஜா மீது மோதினார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சரோஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து, திருவண்ணாமலை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசூர்யா நேற்று தீர்ப்பளித்தார். அதன்படி, விபத்து ஏற்படுத்திய சுந்தர்ராஜுக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனையும் 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post வாலிபருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை திருவண்ணாமலை கோர்ட் தீர்ப்பு பைக் மோதி மூதாட்டி பலியான வழக்கு appeared first on Dinakaran.