×

அரசின் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் மூலம் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு: அமைச்சர் பெருமிதம்


சென்னை: அரசின் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் மூலம் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், இது திராவிட மாடல் அரசின் சாதனை எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார். வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசின் சேவைகளை பெற மக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நிலையிலிருந்து அரசின் சேவைகள் மக்களிடத்திற்கு கொண்டு சேர்க்கும் தொலை நோக்கு திட்டமான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை 2023ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் 15 அரசுத் துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற 44 அடிப்படைப் பொதுசேவைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் தொடங்கப்பட்டு முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு, 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. நகர்ப்புற மக்களிடையே இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து ஊரகப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை 2,344 முகாம்கள் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முகாம்களின் மூலம் இதுவரை மக்களிடமிருந்து பெறப்பட்ட 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு, மக்களின் அரசு, அவற்றையும் தாண்டி மக்களிடம் இறங்கி வந்து சேவையாற்றும் அரசு என்பதற்கு முதல்வரால் தொடங்கப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் மிகச்சிறந்த சான்றாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அரசின் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் மூலம் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு: அமைச்சர் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Perumitham ,Chennai ,K.K.S.S.R. Ramachandran ,
× RELATED பள்ளிகளில் பாலியல் குற்றத்தில்...