
* 2 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து வந்தன
சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து லட்சக்கணக்கான மக்கள் சென்னை திரும்பியதால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிளாம்பாக்கம், பெருங்களத்தூர் பகுதிகளில் 2 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 9 நாள் விடுமுறைக்குப்பின் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் ஒரேநேரத்தில் சென்னை திரும்பியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. குறிப்பாக ஜனவரி 11ம் தேதி தொடங்கி ஜனவரி 19ம் தேதி வரை விடுமுறை கிடைத்தது. இந்த விடுமுறையை தொடர்ந்து ஏராளமானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இந்நிலையில் பொங்கல் விடுமுறை நேற்றுமுன்தினம் முடிந்து நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் இயங்குவதால் மக்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கினர்.
போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க பலர் சனிக்கிழமையே சென்னை திரும்பினர். ஆனாலும் சென்னையில் இருந்து இந்த ஆண்டு ரயில், பேருந்துகள், சொந்த வாகனங்கள் மூலம் சுமார் 15 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்றும் சென்னை திரும்பும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுங்கச் சாவடிகளில் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பலர் அவதியடைந்தனர். பல மணி நேரம் முன்கூட்டியே புறப்பட்டும் சென்னையை அடைய முடியாமல் பலர் திணறினர். சுங்கச் சாவடிகளில் நேற்றுமுன்தினம் முதல் தொடங்கிய நெருக்கடி நேற்று காலை வரை தொடர்ந்தது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வருவோருக்கு நுழைவு வாயிலாக உள்ள கிளாம்பாக்கம், பெருங்களத்தூரில் 2 கி.மீ. நீளத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
மதுராந்தகம் அருகே ஆத்தூர், செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடிகள் வழியே நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தென்மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அரசு மற்றும் தனியார் பேருந்து, கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலமாக சென்னையை நோக்கி படையெடுத்தனர். இதனால் ஆத்தூர், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி முதல் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி முதல் தாம்பரம் வரையிலான ஜிஎஸ்டி சாலையில் நேற்று காலையும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால் அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஊர்ந்தபடி சென்றன.
போக்குவரத்து நெரிசல் காரணமாக, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் சென்னை நகருக்கு மின்சார ரயில்கள் மூலம் கிளம்பி சென்றனர். இதனால் புறநகர் ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. காட்டங்குளத்தூரில் இருந்து தாம்பரம் வரை அதிகாலை 4 மணி முதல் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும், 9 நாள் விடுமுறைக்கு பின்பு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின. இதனால் கடந்த ஒரு வாரமாக அமைதியாக இருந்த சென்னை சாலைகள் நேற்று அதிகாலை முதல் மீண்டும் பரபரப்பாக செயல்பட தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
The post பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் கூட்டம்: ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.
