×

மக்களுடன் முதல்வர் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: 3ம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 3ம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர், நகர் பகுதி மற்றும் ஊரக பகுதிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் 2 கட்டத்திலும் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீது சரியான முறையில் தீர்வு காணப்பட்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் மக்களுடன் முதல்வர் திட்டம் 3ம் கட்டமாக 25 மாவட்டங்களில் 10 இடங்களில் நடத்தப்பட உள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் 3ம் கட்டமாக 9 வருவாய் வட்டங்களில், 11 வட்டங்களில் அமைந்துள்ள கிராம பஞ்சாயத்துகளில் விளிம்பு நிலை பட்டியல் இன மக்கள் அதிகமாக வசித்து வரும் 50 கிராமங்களில் முகாம்கள் நடத்திடவேண்டும். இந்த முகாம் மக்கள் எளிதில் அணுகக் கூடிய இடத்தில் நடத்தப்பட வேண்டும். குறிப்பாக விளிம்பு நிலை பட்டியல் இன மக்கள் அதிகமாக வசித்து வரும் குக்கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

15 துறைகளில் 44 சேவைகளுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுவது தொடர்பாக இந்த முகாம் நடைபெறும். எனவே அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு வரும் கோரிக்கை மனுக்கள் மீது சரியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், பொன்னேரி சப் – கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், தனித்துணை கலெக்டர் (சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம், தீபா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post மக்களுடன் முதல்வர் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur District Collector ,Dinakaran ,
× RELATED திருமழிசை – ஊத்துக்கோட்டை: நெடுஞ்சாலையில் வர்ணம் பூச்சு