×

நீடாமங்கலம் அருகில் மூணாறு தலைப்பு அணையை சுற்றுலா தலமாக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகில் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மூணாறு தலைப்பு அணையை திமுக ஆட்சியில் சுற்றுலா தலமாக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் நகர் ஊராட்சியில் உள்ளது கோரையாறு தலைப்பு அணை(மூணாறு தலைப்பு). இந்த அணை 1874ம் ஆண்டு மே மாதம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் பெரிய வெண்ணாற்றில் வந்து மூணாறு தலைப்பு அணைக்கு வந்தடைகிறது. அங்கிருந்து பாமணியாறு, கோரையாறு, சிறிய வெண்ணாறு என மூன்று ஆறுகள் பிரிந்து பாமணியாற்றில் 38,357 ஏக்கரும், கோரையாற்றில் 1,20,957 ஏக்கரும், சிறிய வெண்ணாற்றில் 94,219 ஏக்கர் விளைநிலங்களும் சாகுபடி செய்யப்படுகிறது.மழை காலங்களில் மூணாறு தலைப்பில் வித விதமான மீன்கள் துள்ளி விளையாடும். மேலும் இயற்கை சூழல் மிகுந்த இடமாக இருப்பதாலும் ஆறுகளில் சீறி பாயும் தண்ணீரை பார்ப்பதற்கும் இங்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுற்றுலா போல் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. காணும் பொங்கல் அன்று பெண்கள் குடும்பத்துடன் வந்து மூணாறு தலைப்பில் தங்கி நீரில் சாமி கும்பிட்டு செல்வதும் வழக்கம். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அவசர மற்றும் பேரிடர் காலங்களில் தங்கி சென்ற இடமாகும்.தற்போது 100 ஆண்டுகள் ஆவதாலும், கட்டிடத்தில் பழுது உள்ளதாலும் யாரும் பயன்படுத்துவதில்லை. இந்நிலையில் பல்வேறு அரசியல் அமைப்புகள், தொண்டு அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் மூணாறு தலைப்பு அணையை சுற்றுலா தலமாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் மூணாறு தலைப்பு அணை சுற்றுலா தலமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிறகு அங்குள்ள மூன்று ஆறு சட்ரஸ்களிலும் வர்ணம் பூசப்பட்டு உயர் கோபுர விளக்கும் அமைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் பணிகள் தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே தற்போது மக்கள் நலனில் அக்கறையுடன் செயல் பட்டு வரும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து மூணாறு தலைப்பு அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்….

The post நீடாமங்கலம் அருகில் மூணாறு தலைப்பு அணையை சுற்றுலா தலமாக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Munnar Topic Dam ,Needamangalam ,Munnar title dam ,DMK ,ADMK ,Dinakaran ,
× RELATED திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண். கல்லூரி மாணவர்கள் பயிற்சி