×

பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது விளையாடி கொண்டிருந்த சிறுமியை கடித்து குதறிய நாய்: நொளம்பூரில் பரபரப்பு; உரிமையாளர் அதிரடி கைது

சென்னை: நொளம்பூரில் சாலையில் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியை வீட்டு வளர்ப்பு நாய் கடித்து குதறிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் வளர்ப்பு நாயின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை நொளம்பூர் ஸ்ரீராம் நகர் பிரதான சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 28ம் தேதியன்று இந்த குடியிருப்பில் வசித்து வரும் விஜயா(எ)விஜயலட்சுமி(43) என்பவர் தனது வளர்ப்பு நாயான ஜெர்மன் ஷெப்பேடு ரக நாயை குடியிருப்பின் வெளியே நடை பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கண்ட நாய் திடீரென உரிமையாளரின் கைப்பிடியில் இருந்து விடுபட்டு குரைத்தப்படி ஓடியது. நாய் வேகமாக தன்னை நெருங்கி அருகே ஓடி வருவதைக் கண்ட சிறுமி அலறியடித்து ஓட்டம் பிடித்தார். சிறுமி ஓடியபோது அவரை துரத்திச் சென்ற நாய் சிறுமியை விரட்டி சென்று கை, கால், முதுகு ஆகிய பகுதிகளில் கொடூரமாக கடித்து குதறியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாயை விரட்டியடித்து சிறுமியை மீட்டனர். பின்னர், சிறுமியை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக சிறுமியின் தந்தை வைரவன்(44) நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நொளம்பூர் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து நொளம்பூர் போலீசார் வளர்ப்பு நாயின் உரிமையாளரான விஜயலட்சுமியை  கைது செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் மீது வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் ஜாமினில் விடுவித்தனர். மேலும், நொளம்பூர் போலீசார் நாயின் உரிமையாளர் விஜயலட்சுமியிடம், இனி இதுபோன்ற தவறு நடக்காது என்பதற்கு உறுதியளிக்கும் வகையில் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் வளர்ப்பு நாய் 9 வயது சிறுமியை துரத்திச் சென்று கடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் உரிமையாளரின் கையில் இருந்து விடுபட்டு சிறுமியை துரத்திச் சென்று கடிக்கும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …

The post பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது விளையாடி கொண்டிருந்த சிறுமியை கடித்து குதறிய நாய்: நொளம்பூரில் பரபரப்பு; உரிமையாளர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Nolampur ,Chennai ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!