×

ஓசூர் அருகே பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாததால் ஓடும் பஸ்சில் குதித்த பிளஸ் 2 மாணவி பலி: டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சினிகிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் நவ்யாஸ்ரீ (17), கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தார். கிறிஸ்துமஸ்-புத்தாண்டு தொடர் விடுமுறை முடிந்து நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். மாலை பள்ளி முடிந்ததும், கெலமங்கலத்திலிருந்து தர்மபுரி நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறி தனது ஊருக்கு பயணம் செய்துள்ளார். சினிகிரிப்பள்ளி கிராமத்திலுள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் பஸ் சென்றுள்ளது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான மாணவி இருக்கையில் இருந்து எழுந்துள்ளார். யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், மாணவியின் மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறியது. படுகாயமடைந்த மாணவி அலறி துடித்தார். உடனே, சக பயணிகள் கூச்சலிட, பஸ்சை டிரைவர் நிறுத்தினர். பின்னர், மாணவியை மீட்டு அதே பஸ்சில் ஏற்றி உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்பு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்றிரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி நவ்யாஸ்ரீ உயிரிழந்தார். இதுதொடர்பாக, டிரைவர் வெங்கடேசன் (58), கண்டக்டர் குமார் (46) ஆகியோர் மீது உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post ஓசூர் அருகே பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாததால் ஓடும் பஸ்சில் குதித்த பிளஸ் 2 மாணவி பலி: டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Hosur ,Muniraj ,Sinikripalli village ,Krishnagiri district ,Navyasree ,Kelamangalam ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்: ஓசூரில் தொழிலாளி தற்கொலை