×
Saravana Stores

திருவள்ளூர் அருகே மழையில் முளைத்த விஷ காளானை சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி, மயக்கம்: மருத்துவமனையில் சிகிச்சை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மழையில் முளைத்த விஷ காளானை சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த புட்லூர் கோ-ஆப் டெக்ஸ் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (46). இவர் கூட்டுக்குடும்பமாக தனது உறவினர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமியின் வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் காளான்கள் முளைத்துள்ளன.

தானாகவே முளைத்த அந்த காளான்கள் விஷத்தன்மையுடன் இருந்துள்ளன. ஆனால், விபரீதம் அறியாமல் அந்த காளான்களை பறித்துச் சமைத்துச் சாப்பிடுவதற்கு லட்சுமிக்கு ஆசை வந்துள்ளது. அதன்படி, நேற்று அந்த காளான்களை பறித்துச் சமைத்த லட்சுமி, விரும்பி சாப்பிட்டுள்ளார். அவர் மட்டுமல்லாது, அவரது குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி (45), அலமேலு (31), வெங்கடேஷ் (23), சரண்யா (14) ஆகியோரும் அந்த காளானை சாப்பிட்டுள்ளனர்.இந்தநிலையில் காளானை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 5 பேருக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 5 பேரும் அங்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷக் காளானை சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

* காளான் சாப்பிட்ட 5 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, புட்லூர் பகுதியில் கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதார அலுவலர் பா.பிரியாராஜ் மேற்பார்வையில் வட்டார மருத்துவ அலுவலர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் மோகன், சுகாதார ஆய்வாளர் வேலன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்கள் மத்தியில் இதுபோன்ற காளான்களை உட்கொள்ளக் கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள குடிநீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லோகம்மாள், ஊராட்சி செயலர் கோபிநாத் மற்றும் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊராட்சி சார்பாக துப்புரவு பணியாளர்களைக் கொண்டு சாலைகள் முழுவதும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு, குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்டன.

The post திருவள்ளூர் அருகே மழையில் முளைத்த விஷ காளானை சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி, மயக்கம்: மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Lakshmi ,Putlur Co-op Tex ,
× RELATED மழையில் முளைத்த விஷ காளானை சாப்பிட்ட 5...