×

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது

பாலக்காடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆதிவாசிகளிடம் இருந்து இரிடியம் வாங்கி தருவதாக கேரள ஐஸ் கம்பெனி அதிபரிடம் ரூ.65 லட்சம் பறித்த வழக்கில் கோவை வாலிபர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் பெஞ்சமி (எ) அருண் (40). இவரது நண்பர் கொல்லம் சவராவை சேர்ந்த சசாங்கன்.

இவர்கள் இரிடியம் வாங்கி தருவதாக கூறி கண்ணூர் ஐஸ் தொழிற்சாலை உரிமையாளர் சாதிக்கிடமிருந்து ரூ.65 லட்சம் பெற்றுள்ளனர். சாதிக், இரிடியம் குறித்து கேட்டபோது, அவர்கள் காலதாமதம் செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சாதிக், கோவையில் இருந்து அருணை கடத்தி அடைத்து வைத்து கூலிப்படையால் சித்ரவதை செய்ததோடு, அடித்து கொலை செய்தார். சசாங்கனையும் அடித்து உதைத்து படுகாயங்களுடன் சாலையில் வீசி சென்றனர்.

இதுதொடர்பாக திருச்சூர் மாநகராட்சி போலீசார் வழக்குப்பதிந்து அருண் கொலை வழக்கில் தொடர்புடைய ஐஸ் கம்பெனி உரிமையாளர் கண்ணூர் மாவட்டம் ஆழீக்கோடு கப்பக்கடவு முகமது சாதிக் (59), தலச்சேரி ஷர்மிநயில் சலீம் (54), பாயிஸ் (48), முஜீப் (49), திருச்சூர் அரணாட்டுக்கரையை திலீப் சந்திரன் (44), நாராயணபுரம் வெம்பலூர் தனேஷ் (32), எர்ணாகுளம் உதயம் பேரூர் சுரேஷ் (44), ஆழீக்கோட்டை சேர்ந்த ஷிஹாப் (40), நாராயணபுரம் அபய் (19) உள்ளிட்ட 9 பேர் கும்பலை கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில், சத்தியமங்கலம் காடுகளில் வசிக்கின்ற ஆதிவாசிகளிடம் இரிடியம் உள்ளது. அதனை வாங்கி விற்றால் ரூ.200 கோடி கிடைக்கும் என அருணும், சசாங்கனும் இணைந்து சாதிக்கை நம்ப வைத்ததோடு அவரிடமிருந்து ரூ. 65 லட்சம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதும், இதனை அறிந்த சாதிக் கடந்த 22ம் தேதி அருணையும், சசாங்கனையும் திருச்சூருக்கு வரவழைத்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத தோட்டத்தில் வைத்து அடியாட்கள் மூலம் அருணை அடித்து கொன்றதும், சசாங்கனை படுகாயப்படுத்தியதும் தெரியவந்தது. கைதானவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Goa ,Palakkad ,Kerala Ice Company ,Satyamangalam ,Indians ,Erode district ,Ice ,Dinakaran ,
× RELATED தம்பதியை கொலை செய்து சடலங்களுடன்...