×

சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு முட்டை, தரமான உணவுகளே வழங்கப்படுகிறது: சமூகநலத்துறை விளக்கம்

சென்னை: சத்துணவு உண்ணும்  குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை மற்றும் உணவு தரமான  முறையில் வழங்கப்படுவது பல நிலைகளிலும் உறுதி செய்யப்பட்ட பின்னரே  வழங்கப்படுவதாக சமூகநலத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கி வரும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பள்ளி சத்துணவு மையங்களுக்கு சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக  முட்டைகள் கொள்முதல்  செய்யப்பட்டு வருகின்றன. முட்டை விநியோகஸ்தர்கள் மூலம் பள்ளி சத்துணவு மையங்களுக்கு வாரம் ஒரு முறை முட்டைகள் விநியோகம் செய்யப்படுகிறது.  அவ்வாறு முட்டைகள் விநியோகம் செய்யப்படும்போது, முட்டைகளின் தரம், அளவு மற்றும் எடையினை நன்கு பரிசோதித்து, நல்ல நிலையில் உள்ள முட்டைகளையே மைய பொறுப்பாளர்கள் பெறுகின்றனர். பெறப்படும் சமயத்திலோ அல்லது ஒரு வார காலத்திற்குள்ளாகவோ பெறப்பட்ட முட்டைகளில் ஓட்டையோ / விரிசலோ அல்லது புழுக்களோ இருந்தது கண்டறியப்பட்டால், அந்த முட்டைகள் மற்றும் அந்த முட்டை இருந்த அட்டை தனியாக வைக்கப்படுகிறது.  ஏனெனில், முட்டை விநியோகஸ்தர்களிடமிருந்து உடைந்த அல்லது புழுக்கள் உள்ள முட்டைகளுக்கு மாற்றாக புதிய முட்டைகள் பெறுவதற்காக அவை தனியாக எடுத்து வைக்கப்படுகின்றன. வாரம் ஒரு முறை முட்டைகள் பெறப்பட்டாலும் ஒவ்வொரு தினமும் முட்டைகள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக எடுக்கும் போதும், அவை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு தரம் உறுதி செய்யப்படுகிறது. அதன் பின்னரே முட்டைகள் வேக வைக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும், உடைந்த அல்லது புழுக்கள் இருந்த முட்டைகள், முட்டை விநியோகஸ்தர்களிடமிருந்து மாற்றி பெறுவதற்காக தனியாக வைக்கப்பட்டுள்ளதை புகைப்படம் எடுத்து உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்படுகின்றன. முட்டைகளை, முட்டை விநியோகஸ்தர்களிடமிருந்து பெறும்போது, அதன் தரத்தினை  உறுதி செய்தல், பழுதடைந்த முட்டைகளுக்கு மாற்றாக புதிய முட்டைகள் பெறுதல், சத்துணவு சமைக்கப்படும் போதும், முட்டைகளை வேக வைக்கும்போதும், பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுரைகளாக அவ்வப்போது  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவுத் திட்டம்) மூலம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், சத்துணவு மைய பொறுப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. சத்துணவு உண்ணும்  குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை உட்பட உணவு தரமான முறையில் வழங்கப்படுவது பல நிலைகளிலும் உறுதி செய்யப்பட்ட பின்னரே வழங்கப்படுகிறது. எந்த ஒரு சத்துணவு மையத்திலும், கெட்டுப்போன அல்லது புழுக்களுடன் உள்ள முட்டைகள் அல்லது தரமற்ற முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை என்பதையும் இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு முட்டை, தரமான உணவுகளே வழங்கப்படுகிறது: சமூகநலத்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Social Health Department ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...