×

திருத்தணி அருகே பரபரப்பு அரசுப்பள்ளி கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து 4 தொழிலாளர்கள் காயம்

திருத்தணி: அரசுப்பள்ளியில் கட்டுமான பணியின் போது திடீரென்று இரும்பு சாரம் சரிந்து விழுந்ததில், 2 பெண்கள் உட்பட 4 தொழிலாளர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே புச்சிரெட்டிப்பள்ளி அரசு மேல் நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.

மேல் மாடி வகுப்பறைகளுக்கு தளம் அமைக்க இரும்பு சாரம் (ஜாக்கி) அமைத்து கம்பிகள் பெட் கட்டப்பட்டு நேற்று கான்கிரீட் தளம் அமைக்கும் பணியில் 40க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். சிமென்ட் கொட்டி கான்கிரீட் தளம் அமைக்கும் பணி பாதி முடிந்த நிலையில், பாரம் அதிகரித்ததால், ஜாக்கி இரும்பு சாரம் சரிந்ததால், கம்பி பெட் மற்றும் கான்கிரீட் சரிந்து விழுந்தது.

அப்போது அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். அவர்களை கட்டிட வேலைக்கு பயன்படுத்திய சரக்கு வேனில் திருத்தணிக்கு அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அரசுப்பள்ளி கட்டிடப்பணியின் போது ஜாக்கி இரும்பு சாரம் சரிந்து கான்கிரீட் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபை ஏற்படுத்தியது.

* பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனம்
பொதுப்பணித்துறை(கட்டிடம்) சார்பில் பள்ளி கட்டிடப்பணிகள் ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்று வருகிறது. நிலையில் கட்டுமான பணிகளை கண்காணிக்க வேண்டிய உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் கட்டிடப் கான்கிரீட் பணியின் போது வேலை நடைபெறும் இடத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இல்லாததால், சாரத்தின் உறுதியை முறையாக ஆய்வு செய்யாததால், கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

The post திருத்தணி அருகே பரபரப்பு அரசுப்பள்ளி கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து 4 தொழிலாளர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Thiruthani ,Thiruvallur District ,Puchirettipalli Govt Higher Secondary School ,Govt School ,Thiruvallur ,
× RELATED திருத்தணி கோயிலில் நடிகர் யோகிபாபு தரிசனம்