×

சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதிகளில் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்

*தீபாவளியை முன்னிட்டு புதிய ரகங்களுக்கு வரவேற்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதிகளில் புதிய டிசைன்களுடன் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சக்கம்பட்டி டி.சுப்புலாபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகள் விளங்கி வருகிறது. சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை என்ற வரிகள் அந்த காலத்தில் முதல் மரியாதை சிவாஜி படத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் காட்டன் சேலைகள் பல்வேறு ரகங்களில் உற்பத்தி செய்யும் வகையில் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விசைத்தறிகளும், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நெசவாளர்களும் நெசவு தொழில் செய்து வருகின்றனர்.

இந்த பகுதியில் சுங்குடி காட்டன், செட்டிநாடு காட்டன், பேப்பர் காட்டன், காரைக்குடி காட்டன், கோடம்பாக்கம் காட்டன், 60க்கு80, 80க்கு60 நம்பர், நைஸ் ரகங்களின் பிளைன், புட்டா, கோர்வை, ஸ்கிரீன் பிரின்டிங், பேடு ரகங்கள், கட்டம் உள்ளிட்ட பல டிசைன்களின் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் ஒரு நாளைக்கு 20 முதல் 25 லட்சம் மதிப்பிலான சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஒரு விசைத்தறி இயந்திரத்தில் 2 நெசவாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஒரு நாளைக்கு 6 ஆயிரம் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 35 லட்சம் மதிப்பில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்தப் பகுதியில் அவரது வீடுகளில் விசைத்தறிகள் அமைத்தும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் விருதுநகர், ஈரோடு, போன்ற மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. சேலைகள் ஒவ்வொரு வாரமும் ஈரோட்டில் நடைபெறும் ஜவுளி சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நேரடியாக வரும் ஆர்டர் மூலம் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.

பொதுவாக இந்த பகுதிகளில் வருடந்தோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் காட்டன் சேலைகள் புதிய ரகம் உற்பத்தி செய்யப்படும். அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு புதிய ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர். தீபாவளி தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாக சேலைகள் உற்பத்தி தொடங்கும். இதேபோல் கோடை காலத்திலும், பொங்கல் பண்டிகை நெருங்கும் போதும் உற்பத்தி அதிகளவில் தொடங்குவார்கள்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகளுக்கு அதிகளவு மவுசு இருக்கிறது. இதனால் நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆன்லைன் மூலம் சேலை விற்பனையை செய்து வருகின்றனர். இந்த ஆன்லைன் விற்பனை வாடிக்கையாளர் மத்தியில் பெறும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாடிக்கையாளர் விஷேச நிகழ்ச்சிகளுக்கு ஆன்லைன் முறையில் சேலைகள் வாங்கி வருகின்றனர். உள்ளுர் வியாபாரிகள் சேலையை படம் பிடித்து பேஸ் புக், வாட்ஸ் அப், இ-மெயில், இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். தேவைப்படும் நபரின் தொடர்புக்கு பின் விலை நிர்ணயம் செய்து வியாபார ஆர்டர் பெற்று பார்சலில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். குறிப்பாக ஆன்லைனில் சேலைகள் விற்பனை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மத்தியிலும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சேலை உற்பத்தியாளர் தெரிவிக்கையில், ‘‘நாங்கள் பல வருடங்களாக காட்டன் சேலைகள் உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது தீபாவளி பண்டிகைக்கு புதிய ரக காட்டன் சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். சக்கம்பட்டி மற்றும் டி‌.சுப்புலாபுரம் பகுதிகளில் ஆண்டுதோறும் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய ரக காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகைக்கு காட்டன் சேலைகள் விற்பனை தொடங்கி அமோகமாக நடைபெற்று வருகிறது’’ என்றார்.

வாடிக்கையாளர்கள் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது இந்த பகுதியில் தான் காட்டன் சேலைகள் வாங்குவோம். இங்குள்ள காட்டன் சேலைகள் தரமானதாகவும் விலை குறைவாகவும் உள்ளது. இந்த பகுதியில் உள்ள காட்டன் சேலைகள் ரூ.500 முதல் தொடங்கி ரூ.1300 வரை அதிகபட்சமாக உள்ளது. இந்த தரத்தில் காட்டன் சேலைகளை மற்ற கடைகளில் வாங்கினால் ரூ.3000க்கு மேல் வாங்க வேண்டிய நிலை வரும். அதேபோல் இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு அதிகப்படியான காட்டன் சேலைகள் வைத்துள்ளனர், ஏராளமான டிசைன்களும் உள்ளன’’ என்றனர்.

சின்ன பிளாஷ்பேக் போவோமா?

காஞ்சிபுரத்தில் கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை பல்லவர்கள் ஆண்டபோது ஒரு வகை நெசவாளர்கள் இருந்தனர். இவர்கள் பல்லவர்கள் குடும்பத்திற்கு மட்டும் ஆடைகள் நெய்து தர வேண்டும். அதற்கு பதிலாக அவர்களுக்கு உண்ண உணவும், இருக்க இடமும் கொடுக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் நெசவாளர்களின் குழந்தைகளின் ஆடைகள், உணவு என அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக பல்லவர்களுக்கு கொடுத்தது போக, மீதமுள்ள ஆடைகளை வெளியில் வியாபாரம் செய்தனர். இதனால் பல்லவர்கள் கோபமடைந்தனர்.

இதுதொடர்பாக நெசவாளர்களுக்கும், பல்லவர்களின் படைகளுக்கும் இடையே நடந்த சண்டையில் அதிக நெசவாளர்கள் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்தவர்கள் மதுரைக்கு புலம்பெயர்ந்தனர். அவர்கள் பாண்டிய மன்னனிடம் தஞ்சம் அடைந்து பிழைக்க வழி கேட்டனர். பாண்டிய மன்னனும் தனது ராஜ்ஜியத்திற்கு உட்பட்ட பகுதியில் நெசவு தொழில் செய்து கொள்ள அனுமதி கொடுத்தார்.

அதன்படி இன்றும் ஒரு பகுதியினர் மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியில் நெசவு தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு குழுவாக அருப்புக்கோட்டை, ராஜபாளையம் திருவில்லிபுத்தூர், பெரியகுளம் என பிரிந்து சென்றனர். பின்னர் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமபட்டி பகுதியில் குடியேறி நெசவு தொழிலை தொடங்கி இன்று வரை செய்து வருகின்றனர்.

8 மடக்கு மடக்கினாலும் மடிப்பு குலையாது…

இந்த சக்கம்பட்டி சேலையின் சிறப்புகளை பார்ப்போம். நூறு சதவீதம் பருத்தியினால் செய்த சேலை, பட்டுச்சேலை, ரேயான் சேலை, பாப்ளின் சேலை என பலவிதத்தில் சேலை நெய்கின்றனர். இவர்கள் நெய்யும் சுங்குடிச்சேலை மிகவும் பிரபலம். சுங்குடிச் சேலையில் உள்ள சிறப்பு என்னவென்றால் மற்ற சேலைகள் கட்டும்போது மடிப்பு, கொசுவம் வைக்க சிரமப்படுகின்றனர். ஆனால் இங்கு நெய்யும் சுங்குடிச் சேலையை 8 மடக்கு மடக்கி கட்டினால் கூட அந்த மடிப்பு மடங்காமல் நிற்கும்.

அதை இடுப்பில் செருகவும் வசதியாக இருக்கும். இங்கும் நெய்யும் சேலையின் (பார்டர்) விளிம்பில் உள்ள பட்டை போன்ற பகுதியை எப்படிக் கசக்கினாலும் மடிப்புக் குலையாமல் இருக்கும். பருத்திக்காயைப் பிடுங்கி அதைக் காய வைத்து, இதில் வரும் பஞ்சுகளை எடுத்துச் சேலையோ, வேட்டியோ செய்யும்போது, அத்துணி ஒழுங்காக அமையாது. ஆனால் இயற்கையாக பருத்தி வெடித்து வரும் பஞ்சுகளில் நெய்யப்படும் சேலை, வேட்டிகள் சிறப்பான துணியாக இருக்கும்.

நம் உடலில் வண்டுக்கடி இருக்கும்போது, வெடித்த பருத்தியினால் நெய்த துணியை உடுத்தினால் உடலில் இருக்கும் அந்த நச்சுத்தன்மை, விஷத்தன்மையை உறிஞ்சி எடுத்து விடும். பருத்திக்காயைப் பயன்படுத்தாமல் இயற்கையாக வெடித்த பருத்தியைப் பயன்படுத்தி ஆடை நெய்வதால், இங்கு நெய்யப்படும் ஆடைகளுக்கென்று மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உள்ளது.

The post சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதிகளில் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chakampatty ,T. ,Suppulaburam ,Diwali ,Theni District ,Sakampatty ,D. ,Dinakaran ,
× RELATED நமக்கு தெரிந்ததை கூட சிறு தொழிலாக மாற்றலாம்!