×

பெரியகுளம் அருகே குளத்தில் கலக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்

*தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பெரியகுளம் : பெரியகுளம் அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் குளத்தில் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரியகுளம், நகராட்சிக்கு சொந்தமான பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டு பகுதியில் இருந்து வரும் பாதாள சாக்கடை கழிவு நீரை சுத்திகரித்து அருகே நகராட்சிக்கு சொந்தமான 150 ஏக்கரில் உள்ள புல் பண்ணைக்கு அனுப்பி வந்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் நீரை சுத்திகரிக்காமல், அருகே உள்ள பொட்டக்குளம், நடுக்குளம், கல்லுக்குளம், சிறுகுளம் உள்ளிட்ட 4 கண்மாய்களுக்கு நீர் செல்லும் வாய்க்காலில் திறந்து விடுவதால் குளத்து நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகின்றது.இதனிடையே அந்த குளத்தின் பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட ஆழ்துளை போர் அமைத்து நீர் எடுத்து எண்டப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட எ.புதுப்படி கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

குளத்து நீரில் பாதாள சாக்கடை நீர் கலப்பதால் குளத்து நீர் மாசடைந்து, அந்த பகுதியில் இருந்து எடுக்கப்படும் நீரும் துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் விவசாய நிலங்களுக்கு நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளும் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு உள்ள குளத்து நீரில், பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெரியகுளம் அருகே குளத்தில் கலக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் appeared first on Dinakaran.

Tags : peryakulam ,Beriyakulam ,Mandapuli Uratchi ,Dinakaran ,
× RELATED ஆகாய தாமரைகள் அகற்றியதால் பெரியகுளம், வாலாங்குளம் ‘பளிச்’