×

மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உள்துறைச் செயலாளர் உடனே நியமிக்க ஆணை வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிறுமி பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதான ராமநாதபுரம் திருவாடனையை சேர்ந்த கவின் என்பவர் ஜாமீன் வழங்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுமியை கூட்டு வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியுள்ளதால் ஜாமீன் தரக் கூடாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட 3 செல்போன்களில் பல்வேறு புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளன. முதல் செல்போனில் 79,701 புகைப்படங்கள், 8,446 வீடியோக்கள் உள்ளது. 2ஆவது செல்போனில் 39,195 புகைப்படங்கள் மற்றும் 359 வீடியோக்கள் உள்ளன. 3ஆவது செல்போனில் 96,353 புகைப்படங்கள் மற்றும் 2,820 வீடியோக்கள் உள்ளன என்று அரசு தரப்பில் தெறிக்கப்பட்டது. குற்றவாளிகளிடம் கைப்பற்றிய மொபைல்களில் பல்லாயிரக்கணக்கான வீடியோ, புகைப்படங்களை பார்த்து நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். மேலும் இவ்வளவு வீடியோ, புகைப்படங்களில் பாதிக்கப்பட்ட சிறுமி புகைப்படம் உள்ளதா என கண்டறிந்து அறிக்கை தர தாமதம் ஏன்?

இந்த வழக்கு மட்டுமின்றி பல வழக்குகளில் தடயவியல் அறிக்கை தருவதற்கு தாமதமாக காரணம் என்ன? எனவும் கேள்வி எழுப்பினார். தனக்கு கீழ் அதிகாரிகள் குறைவாக உள்ளதாக தடயவியல் துறை மதுரை மண்டல இணை இயக்குநர் ஆஜராகி பதிலளித்தார். தனக்கு கீழ் 1 உதவி இயக்குநர், 2 பரிசோதனை அலுவலர்கள், 2 இளநிலை பரிசோதனை அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். குற்றவாளிகளின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்படுவதால் பணிச்சுமை அதிகரிக்கிறது. போதிய ஆள் பற்றாக்குறையே அறிக்கை வழங்க தாமதம் ஏற்படுகிறது என்று தடயவியல் இணை இயக்குநர் விளக்கம் அளித்தார்.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு வழக்கிலும் தடயவியல் அறிக்கை வர தாமதமானால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள், மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உள்துறைச் செயலாளர் உடனே நியமிக்க வேண்டும். குற்ற வழக்குகளில் புலனாய்வுத் தன்மையை அதிகரிக்க தேவையான கூடுதல் பதவிகளையும் உருவாக்க வேண்டும் என மதுரை மண்டல தடயவியல் ஆய்வகத்தில் அலுவலர் பணியிடங்களை உடனே நிரப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai Zone ,Aycourt ,Madurai ,Icourt branch ,Secretary of the Interior ,Gavin ,Ramanathapuram Thiruvadana ,Aycourt Branch ,Dinakaran ,
× RELATED இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட...