×

கனகம்மாசத்திரம் அருகே பரபரப்பு வருவாய்த்துறையினர் நிலத்தை அளவிட எதிர்ப்பு: போலீசாருடன் வாக்குவாதம்

திருத்தணி: விவசாய நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வருவாய் துறையினரை ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் கனகம்மாசத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே லட்சுமாபுரம் ஊராட்சி டி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் விவசாய நிலத்தில் பொது வழி அமைப்பது தொடர்பாக அவரது பக்கத்து நிலத்தின் உரிமையாளர் அருணாசலம் என்பவருடன் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக இரு தரப்பினரும் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் நில அளவீடு செய்ய உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி திருத்தணி வட்டாட்சியர் மலர்விழி விவசாயிகள் 8 பேருக்கு நில அளவீடு தொடர்பாக 20 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கினர். அருணாசலம் சார்பில் நில அளவீடு செய்ய கூடுதல் அவகாசம் கேட்டதால் 10 நாட்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மண்டல துணை வட்டாட்சியர் திருவேங்கடம், வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, சர்வேயர் துர்கா, கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி ஆகியோர் நில அளவீடு பணியில் ஈடுபட்டனர். கனகம்மாசத்திரம் உதவி காவல் ஆய்வாளர் மாலா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நில அளவிடும் பணிகளை செய்ய விடாமல் தடுத்த அருணாசலம் குடும்பத்தினர் வருவாய் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடுக்க முயன்ற போலீசாரை பார்த்து ஒருமையில் பேசி அரசு ஊழியர்கள் பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடும் வாக்குவாதத்திற்கு பிறகு போலீசார் பாதுகாப்புடன் நில அளவீடு மேற்கொண்டு குறிப்பிட்ட விவசாய நிலத்தில் பொதுவழி இல்லை என்று உறுதி செய்யப்பட்டு அறிக்கை கோட்டாட்சியருக்கு சமர்பிக்கப்படும் என்று மண்டல துணை வட்டாட்சியர் தெரிவித்தார்.

The post கனகம்மாசத்திரம் அருகே பரபரப்பு வருவாய்த்துறையினர் நிலத்தை அளவிட எதிர்ப்பு: போலீசாருடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Bustle ,Kanakammasatram revenue department ,Kanakkammassathram ,Thiruvallur district ,Kanakammasathram ,Lakshampuram panchayat DR Kandigai ,post Revenue department ,Kanakammashatram ,Dinakaran ,
× RELATED அருமனை அருகே பரபரப்பு; இரவு முழுவதும்...