×

பாப்பனம் ஊராட்சியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த கோரிக்கை

 

கமுதி, செப். 14: கமுதி அருகே பாப்பனம் ஊராட்சியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கமுதி அருகே பாப்பனம் ஊராட்சியில் பாப்பனம், முத்துவிஜயபுரம்,குன்றங்குளம், புல்லந்தை, தீர்த்தான் அச்சங்குளம் போன்ற கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் பெரும்பான்மையினர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

பருவமழை காலங்களில் பெய்து வரும் மழைநீர் இப்பகுதிகளில் உள்ள கண்மாய் மற்றும் ஊரணிகளில் நிரம்பி விவசாயம் மட்டும் குடிநீருக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. நெல், பருத்தி, கடலை உள்ளிட்ட பயிர்கள் இப்பகுதியில் பயிரிடப்பட்டு வருகின்றன. வானம் பார்த்த பூமியாக இப்பகுதி இருந்து வருவதால்,பருவ மழை காலங்கள் தவிர மற்ற நாட்களில் இப்பகுதியினர் பல்வேறு பகுதிகளில் கூலி வேலை செய்து

வருகின்றனர். சீரான வாழ்வாதர மின்றி தவித்து வரும் இப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்னையால் தவித்து வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு பாப்பனம் கிராமத்தில் உள்ள 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த குறைந்த அளவு குடிநீர் விநியோகம் இப்பகுதி மக்கள் தேவைக்கு போதிய அளவு இல்லாததால், இப்பகுதியினர் குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். எனவே இப்பகுதியில் கூடுதலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து, இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை சரி செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாப்பனம் ஊராட்சியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Papanam panchayat ,Kamudi ,Pappanam ,Muthuvijayapuram ,Kunrangakulam ,Pullanthai ,Thirthan Achankulam ,Pappanam panchayat ,
× RELATED மாரியம்மன் கோயிலில் கொள்ளைக்காரன் பூஜை