×

கஞ்சா பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

கடலூர், செப். 4: கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வாலிபரிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார், கடந்த ஏப்ரல் மாதம் கம்மியம்பேட்டை பைபாஸ் சாலை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர் 900 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில், திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் முனீஸ் என்கிற முனுசாமி (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழி பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் செல்வம் (35) என்பவரை போலீசார் தேடி வந்தனர். அப்போது அவர் கடலூர் வண்டிப்பாளையத்தில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், தலைமை காவலர்கள் பிரபு மற்றும் கிருஷ்ணராஜ் ஆகியோர் வண்டிப்பாளையம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கொண்டங்கி ஏரி பகுதியில் மறைந்திருந்த நாய் குட்டி என்கிற செல்வத்தை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கஞ்சா பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Tirupathiripuliyur, Cuddalore ,Tirupathiripuliyur ,Kammiyampet bypass road ,Dinakaran ,
× RELATED கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே...