×

அனைத்து சமூகத்தையும் அரவணைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமத்துவ ஆட்சி நடத்தி வருகிறார்: ஆர்.எஸ்.பாரதி பெருமிதம்

தண்டையார்பேட்டை: திமுக வர்த்தகர் அணி சார்பில், ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை பட்ஜெட் என்ற பெயரில் கருத்தரங்கம் ராயபுரத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் பாண்டி செல்வம் தலைமை வகித்தார். சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி முன்னிலை வகித்தனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:

கலைஞர் நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்தது சிலருக்கு புகைச்சலை ஏற்படுத்தி உள்ளதால், பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். ராஜ்நாத் சிங் ஒன்றிய அமைச்சர். அதனால் தான் அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ராகுலுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை, என எடப்பாடி கேட்கிறார். இது, ஒன்றிய அரசு நடத்தும் நிகழ்ச்சி என்று கூட அவருக்கு தெரியவில்லை.

இதுவரை தமிழ்நாட்டில் 50 தலைமை செயலாளர்கள் இருந்துள்ளார்கள். அதில், பட்டியல் இனத்தை சேர்ந்த 2 பேரை, கலைஞர் நியமித்தார். தற்போது, முதல்வர் மு.க.ஸ்டான் பட்டியல் இனத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரை 3வது நபராக நியமித்துள்ளார். சமத்துவ ஆட்சி நடத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சரின் உடை குறித்து விமர்சிப்பவர்கள், மோடி குறித்து பேசுவார்களா. பேசினால், அவர்கள் வீட்டிற்கு ரெய்டு வரும் அல்லது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நாஞ்சில் சம்பத் பேசுகையில், ‘‘நாடு முழுவதும் விவாதமாக பேசப்படும் பொருளாக ஒன்றிய அரசின் பட்ஜெட் உள்ளது. சமஸ்கிருத மொழிக்கு ரூ.640 கோடி செலவு செய்கிறார்கள். ஆனால் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு ரூ.23 கோடி ஒன்றிய அரசு ஒதுக்குகிறது.இது ஒன்றிய அரசின் பட்ஜெட் அல்ல ஆந்திரா, பீகார் பட்ஜெட் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழக வெள்ள பாதிப்புக்கு ரூ.35 ஆயிரம் கோடி வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் ரூ.250 கோடி மட்டும் தான் வழங்கினார்கள். குஜராத்தில் பாதிக்கப்பட்டபோது நிதியை வாரி வழங்குகிறார்கள். இதுவரை வழங்கவில்லை. இவர்களின் மோசமான செயல்பாடுகளால், மராட்டியத்தில் பா.ஜ.வுக்கு மூடு விழா நடந்துள்ளது. இதே நிலை விரைவில் நாடு முழுவதும் ஏற்படும்,’ என்றார். நிகழ்ச்சியில், இளைய அருணா, பகுதி செயலாளர்கள் செந்தில்குமார் லட்சுமணன் வழக்கறிஞர் மருது கணேஷ் வர்த்தகர் அணி நிர்வாகிகள் சிவக்குமார், கூல் பிரகாஷ், லயன் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

The post அனைத்து சமூகத்தையும் அரவணைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமத்துவ ஆட்சி நடத்தி வருகிறார்: ஆர்.எஸ்.பாரதி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,RS Bharathi Perumidham ,Thandaiyarpet ,DMK ,Rayapuram ,Union Government ,Pandi Selvam ,Chennai North District ,RS Bharathi Perumitham ,
× RELATED அனைவருக்கும் முன்னேற்றத்தை அளிக்கும்...