சென்னை: தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அறநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் சட்டப்பூர்வமான வாடகை ஒப்பந்தம் ஏதுமின்றியும், உரிய வாடகை செலுத்தாமலும் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வரும் நபர்கள் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய காவல் நிலையத்தில் முறையாக புகார் மனு அளித்திட சம்பந்தப்பட்ட அறநிறுவனங்களின் அறங்காவலர்கள் அல்லது தக்கார் அல்லது செயல் அலுவலர்களை அறிவுறுத்தப்படுகிறது. இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி குற்ற நிகழ்வு குறித்து அறிந்த எந்த ஒரு நபரும் புகார் மனு அளித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அறநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளை சட்டப்படியான உரிமையின்றி அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து கோயில் நிர்வாகிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு விரைந்து ஆக்கிரமிப்புதாரர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஆக்கிரமிப்புதாரர்களுக்கு எதிராக தனிநபர்களால் காவல் நிலையத்தில் அளிக்கப்படும் புகார் மனு மீதான விசாரணைக்கு தேவையான ஆவணங்களையும், முழுமையான ஒத்துழைப்பையும் காவல்துறைக்கு வழங்க வேண்டுமென கோயில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….
The post இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் சொத்துகளை சட்டவிரோதமாக அனுபவித்து வருவோர் மீது புகார் தரலாம்; மண்டல இணை ஆணையர்களுக்கு ஆணையர் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.