திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் எருமேலியில் இருந்து பெருவழிப் பாதை வழியாகவும் செல்வது வழக்கம். 18 கிமீ நீளமுள்ள இந்தப் பாதை முழுவதும் வனப்பகுதியாகும். மண்டல, மகரவிளக்கு காலங்களில் மட்டுமே பக்தர்கள் இந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019க்கு பின்னர் இந்தப் பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது இப்பாதை திறக்கப்பட உள்ளது. ஆனால், 2 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் கிடப்பதால், பாதையை சீரமைத்த பின்னரே பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை சிறப்பு அதிகாரி அர்ஜுன் பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் இன்று இந்த பாதையை ஆய்வு செய்கின்றனர். பாதை சீரமைக்கப்பட்ட பிறகு, மகரவிளக்கு பூஜைக்கு நடை திறக்கும் டிசம்பர் 30ம் தேதி முதல் இந்த பாதையில் பகலில் மட்டுமே பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.* தங்க அங்கி ஊர்வலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. 25ம் தேதி மதியம் பம்பையை தங்க அங்கி ஊர்வலம் அடையும், பம்பை கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தங்க அங்கி வைக்கப்படும். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.20 மணியளவில் சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து, ஐயப்பன் விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும். மறுநாள் (26ம் தேதி) பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். அன்றிரவு 10 மணியளவில் ேகாயில் நடை சாத்தப்படும். அன்றுடன் 41 நாள் நீண்ட மண்டல காலம் நிறைவடையும். மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும்….
The post சபரிமலை ஐயப்பன் கோயில் பெருவழிப் பாதை 30ம் தேதி திறப்பு appeared first on Dinakaran.