×

இ.ஓ.எஸ்-8 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை: புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஒஎஸ்-8 உடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 ஆகிய விண்வெளி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதுபோன்ற பெரிய திட்டங்களை ஒரு பக்கம் செயல்படுத்தினாலும் வானிலை ஆராய்ச்சி, புவி கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக செய்ற்கைக்கோள்களை ஏவி வருகிறது. அந்தவகையில், புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இஒஎஸ்-8 செயற்கைக்கோளை எஸ்எஸ்எல்வி-டி3 சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் மூலம் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் 32 மீட்டர் உயரம், 175 கிலோ எடை கொண்டது. இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்பராரெட் பேலோடு (இஓஐஆர்), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிபிளக்டோமெட்ரி பேலோட் (ஜஎன்எஸ்எஸ்-ஆர்) மற்றும் எஸ்ஐசி யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வு கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

இந்த கருவிகளின் பணிக்காலம் ஒரு ஆண்டாகும். இஒஎஸ்-8 செயற்கைக்கோளுடன் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் எஸ்ஆர் டெமோசாட் என்ற 200 கிராம் எடைகொண்ட சிறிய செயற்கைக்கோளும் செலுத்தப்பட உள்ளது. எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுடன் செயற்கைக்கோள்களை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து ஆயத்த பணிகளும் முடிக்கப்பட்டு விண்ணில் செலுத்துவதற்கு தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

செயற்கைக்கோளுக்கு ஏற்ப ஆராய்ச்சி கருவிகளை உருவாக்குவது மற்றும் எதிர்காலத்தில் செயல்படும் செயற்கைக்கோள்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை இணைப்பது, புதிய பெருமுகக் கணிப்பொறி தொழில்நுட்பங்களுடன் நுண் செயற்கைக்கோள்களை வடிவமைப்பது மற்றும் உருவாக்குவது ஆகியவை இந்த இஓஎஸ்-8 செயற்கைகோளின் முதன்மை நோக்கம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

The post இ.ஓ.எஸ்-8 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Earth ,Isero Chandrayaan ,3 ,Aditya L1 ,Indian Space Research Institute ,India ,
× RELATED காகத்திற்கு சாதம் வைக்கும் போது செய்யக்கூடாத சில தவறுகள்.!!