×

வாலாஜா – ஸ்ரீபெரும்புதூர் சாலை 6 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாலாஜா – ஸ்ரீபெரும்புதூர் சாலையில், 6 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின், ஸ்ரீபெரும்புதூர் – வாலாஜா இடையிலான பகுதியில் நேற்று காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வேலூரில் இருந்து சென்னை வரும் பாதையில் வாலாஜா, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட நெரிசலால் பல கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.இதற்கு காரணம் ஸ்ரீபெரும்புதூர் – வாலாஜா இடையிலான 6 வழிச் சாலைப் பணிகள் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவடையாதது தான். இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இது முதல்முறையல்ல. ஆகஸ்ட் மாதத்தின் 12 நாட்களில் மூன்றாவது முறையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

ஆனாலும், அதை தவிர்க்கவோ, முடங்கிக் கிடக்கும் பணிகளை விரைவுபடுத்தவோ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது கண்டிக்கத்தக்கது.இதே நிலை நீடித்தால் இன்னும் இரு மாதங்களில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்த சாலையில் பயணிப்பது மிக மோசமான அனுபவமாகி விடும். ஏற்கனவே வாலாஜா – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் தாமதமடைந்து வருவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், தமிழ்நாடு அரசும் இந்த திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களை அழைத்துப் பேசி சாலை விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்தி, அதிகபட்சமாக அடுத்த 6 மாதங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அந்த சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வாலாஜா – ஸ்ரீபெரும்புதூர் சாலை 6 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Walaja – Sriperumbudur road ,Ramadoss ,CHENNAI ,Ramadas ,Walaja-Sriperumbudur road ,BAMA ,Kanchipuram ,Vellore ,
× RELATED திரைப்பட இயக்குனர் மோகனை விடுதலை...