×

கிறிஸ்துமஸ்சையொட்டி களை கட்டிய மாட்டு சந்தை-ரூ.2 கோடிக்கு வர்த்தகம்

பொள்ளாச்சி : கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றது.பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள்  நடக்கிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு  பகுதியிலிருந்தும். ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் காளை மாடு, பசு மாடு, எருமை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகள் நேரடியாக வந்து குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர். இதில், கடந்த மாதம் 17ம் தேதியிலிருந்து சபரிமலை சீசன் துவக்கம் மற்றும் அடிக்கடி கனமழையால் உள்ளூர், ஆந்திர மாநிலத்தில் இருந்து மாடுகள் வரத்து இல்லாததால் விற்பனை மந்தமாகி குறைந்த விலைக்கு போனது. நேற்று நடந்த சந்தை நாளின்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும். ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் வழக்கத்தைவிட சுமார் 3000க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இதனால் சந்தையின் பெரும் பகுதி மாடுகள் நிறைந்த இடமாக களை கட்டியது.கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி சந்தையில் மாடுகளை வாங்க, கேரள வியாபாரிகள் வருகை அதிகளவில் இருந்தனர். இதனால் விறுவிறுப்புடன் நடைபெற்றதுடன் வழக்கத்தைவிட கூடுதல் விலைக்கு போனது. இதில் ஆந்திர மாநில காளைமாடுகள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.48 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும், நாட்டு மாடு ரூ.28 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.36 ஆயிரத்துக்கும், பசுமாடு ரூ.32 ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ.38 ஆயிரத்துக்கும், கன்று குட்டிகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரையிலும் என கூடுதல் விலைக்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.2 கோடி வரையிலும் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக, மாட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்….

The post கிறிஸ்துமஸ்சையொட்டி களை கட்டிய மாட்டு சந்தை-ரூ.2 கோடிக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.

Tags : Cattle Market ,Christmas ,Pollachi ,Pollachi market ,Municipal Cattle Market ,
× RELATED வேலூர் பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம்