×

கைதிகள் தப்பிக்க முயற்சியா? திருச்சி முகாம் சிறையில் 100 போலீசார் திடீர் ரெய்டு: செல்போன்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இலங்கை திரிகோணமலையை சேர்ந்த அப்துல் ரியாஸ்கான் (எ) அப்துல் ரியாஸ் (40) என்பவர் கடந்த மாதம் 22ம்தேதி காலை தனது அறை எண் 9ல் இருந்து ஜன்னல் கம்பியை உடைத்து தப்பி சென்றார். மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தப்பி சென்ற ரியாஸ்கானை தீவிரமாக தேடி வந்தனர். கடந்த 2ம்தேதி இரவு ராமேஸ்வரத்தில் உள்ள தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக திருச்சி ரயில் நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின்பேரில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை திடீரென சிறப்பு முகாமில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது முகாம் முழுவதும் சுற்றி பார்த்ததுடன் கைதிகள் தப்பிக்க முயற்சி ஏதும் செய்துள்ளனரா, ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனரா என தீவிர சோதனை நடந்தது. இதில் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 6 மணிக்கு துவங்கிய இந்த சோதனை 2 மணி நேரம் நீடித்தது. பின்னர் 8 மணியளவில் முகாம் சிறையிலிருந்து போலீசார் புறப்பட்டு சென்றனர்.

The post கைதிகள் தப்பிக்க முயற்சியா? திருச்சி முகாம் சிறையில் 100 போலீசார் திடீர் ரெய்டு: செல்போன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Trichy Camp Jail ,Trichy ,Trichy Central Jail ,Sri Lanka ,Bangladesh ,Nigeria ,Abdul Riaz Khan ,A) Abdul Riaz ,Trikonamalai, Sri Lanka ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் உரிமையாளர்களை...