×

பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் ஆபாச படம் அனுப்பி தொடர்ந்து டார்ச்சர் செய்த கல்லூரி மாணவன் கைது: போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு

சென்னை: மாங்காட்டில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பொறியியல் கல்லூரி மாணவனை போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் கைது செய்தனர். சென்னை, மாங்காடு சக்தி நகரை சேர்ந்தவர் நித்யா (17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி மாணவி நித்யா, மாங்காட்டில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் உருக்கமான மூன்று கடிதங்களை எழுதி வைத்திருந்தார். மேலும், தனது தற்கொலைக்கான காரணம் பாலியல் அத்துமீறல்தான் என்றும் தற்கொலைக்கு தூண்டிய நபர் யார் என்பது குறித்தும், பெயர் குறிப்பிடாமல் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து, அவர் ஏற்கனவே படித்த தனியார் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அந்த மாணவியின் நண்பர்கள் என 20க்கும் மேற்பட்டோரிடம் மாங்காடு போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். மேலும், மாணவி நித்யாவின் செல்போனை கைப்பற்றி, அதில் அவர் யாரிடமெல்லாம் அதிகமாக பேசினார் என்பது குறித்தும், செல்போனில் பதிவாகி இருந்த நம்பர்களை வைத்தும் பள்ளி மாணவன் மற்றும் கல்லூரி மாணவர்கள் என நான்கு பேரை பிடித்து விடிய விடிய தீவிரமாக விசாரித்து வந்தனர். இதில், மாங்காட்டை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (20) என்ற கல்லூரி மாணவன் அதிகமாக மாணவி நித்யாவிடம் செல்போனில் பேசி இருப்பதும், ஆபாச தகவல்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் ஏராளமாக அனுப்பி இருந்ததும் தெரியவந்தது. அந்த வாலிபரிடம் தொடர் விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், குன்றத்தூர் அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இசிஇ 3ம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் விக்னேஷ் அந்த மாணவியை காதலித்து வந்ததாகவும், மாணவி டைப் ரைட்டிங் வகுப்புக்கு செல்லும்போது, பழக்கம் ஏற்பட்டு, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், விக்னேஷ் வேறொரு பெண்ணுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் நித்யா, விக்னேஷ் இடையே தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த மாணவியின் செல்போனுக்கு ஆபாசமாக படங்கள், குறுந்தகவல்கள் எல்லாம் அனுப்பி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், கடும் மன உளைச்சலில் தவித்து வந்த நித்யா, தற்கொலை முடிவை எடுத்துள்ளார். விக்னேஷ், நித்யாவுக்கு அனுப்பிய ஆபாச தகவல்கள் மற்றும் அவரது செல்போனில் இருந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீது, பெண் வன்கொடுமை, போக்சோ, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், மாணவியை பழிவாங்கும் நோக்கில் அவரது நண்பர்களை வைத்து மாணவியின் செல்போனுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க வைத்தாரா, மாணவிக்கு வேறு யாராவது பாலியல் தொல்லை கொடுத்தார்களா என்ற கோணத்திலும் மாணவியின் செல்போனை மேலும் தீவிரமாக போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், அந்த மாணவி கடிதத்தில் குறிப்பிட்டதுபோல் உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்ததால், மாணவியின் தற்கொலைக்கு வேறு யாராவது காரணமாக இருப்பார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அதேநேரத்தில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் மாணவன் விக்னேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா, மாணவன் விக்னேஷை வருகிற 3.1.2022 அன்று வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நித்யா, விக்னேஷ் இடையே தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த மாணவியின் செல்போனுக்கு ஆபாசமாக படங்கள், குறுந்தகவல்கள் எல்லாம் அனுப்பி உள்ளார்….

The post பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் ஆபாச படம் அனுப்பி தொடர்ந்து டார்ச்சர் செய்த கல்லூரி மாணவன் கைது: போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mangat ,POCSO ,
× RELATED 3 வயது குழந்தையிடம் செக்யூரிட்டி சில்மிஷம்: போக்சோ சட்டத்தில் கைது