×

திருவேற்காடு அயனம்பாக்கத்தில் இன்ஜினியர் வீட்டில் புகுந்து 100 சவரன் கொள்ளை: முகமூடி ஆசாமிக்கு வலை

சென்னை: சென்னை அருகே கட்டுமான நிறுவன இன்ஜினியர் வீட்டில் புகுந்து 100 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த முகமூடி ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த திருவேற்காடு அயனம்பாக்கம், ஈஜிபி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (45), வெளிநாட்டில் கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோகிலா (40). இவர்களுக்கு பவதாரணி என்ற ஒரு மகள் உள்ளார். ஜனார்த்தனன் கடந்த மாதம்தான் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை குடும்பத்துடன் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளனர். பின்னர், இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 100 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு ஜனார்த்தனன் தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வெளிநாட்டில் வேலை செய்யும் ஜனார்த்தனன் ஆண்டுக்கு ஓரிருமுறை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இதற்கு முன்பு இவர்கள் கும்மிடிப்பூண்டியில் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் நீட் தேர்வு பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்பதால் முகப்பேரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதற்காக இந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டிற்கு வாடகைக்கு வந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் வெளியே சென்று இருந்த நேரத்தில் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் தனி நபர் ஒருவர் முகமூடி அணிந்து கொண்டு வந்து வீட்டின் கதவில் உள்ள பூட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று நகை பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. பல நாட்களாக வீட்டை நோட்டமிட்டு அந்த மர்ம நபர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்.

இந்த வீடு அமைந்துள்ள பகுதி புதிதாக வளர்ந்து வரும் பகுதியாகும். இங்கு நெருக்கமாக வீடுகள் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் உள்ளன. இதனால், பெரும்பாலான நேரங்களில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நோட்டமிட்ட மர்ம நபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்ஜினியர் வீட்டில் புகுந்து 100 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருவேற்காடு அயனம்பாக்கத்தில் இன்ஜினியர் வீட்டில் புகுந்து 100 சவரன் கொள்ளை: முகமூடி ஆசாமிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thiruvendra Ionambakam ,Assami ,Chennai ,Assam ,Thiruvengadu Ionambakkam ,EGP ,Thiruveshwar ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!