×

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திறந்து வைப்பதற்கு முன்பே சாலையை உடைத்து பேட்ச் வொர்க் ரூ.6,431 கோடியில் ஒன்றிய அரசு கட்டிய மேம்பாலத்தில் பல இடங்களில் விரிசல்

விழுப்புரம்: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.6,431 கோடியில் ஒன்றிய அரசு கட்டிய மேம்பாலத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேம்பாலம் திறப்பதற்கு முன்பே முன்பே சாலையை உடைத்து பேட்ச் வொர்க் செய்து வருகின்றனர். இந்தியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. கிராமங்களையும் நகரங்களையும் இணைக்க புதிய உள்கட்டமைப்புகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.

பல இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய அரசால் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் மேம்பாலங்கள் இடிந்து விழுவதும், திறப்பதற்கு முன்பே விரிசல் விடுவதும், திறந்த சில மாதங்களிலேயே சாலைகள் சேதமாவதும் தொடர் கதையாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கட்டுமானங்களில் நடக்கும் ஊழல்தான். தரமற்ற பொருட்களை பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் கட்டுவதால் இதுபோன்ற சம்பவங்களில் நடப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 15 பயன்பாடில் இருந்த பாலங்கள் மற்றும் கட்டுமான பணிகள் நடந்து வந்த 11 மேம்பாலங்களில் இடிந்து விழுந்து உள்ளதாகவும், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். ஆனால், கடந்த 3 வாரத்தில் மட்டும் பீகார் மாநிலத்தின் சிவன், சரண், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பாரண் மற்றும் கிஷாங் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 13 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல், மும்பை-நவி மும்பை இணைக்க கடல் வழியாக அமைக்கப்பட்ட கடல் சேது பாலமும் திறந்து மூன்றே மாதத்தில் சேதமடைந்தன. இவ்வாறு பல மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்படும் பாலம் தரம் இல்லாமல் உள்ளதால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் நிலை உள்ளது. அந்த வரிசயைில் விழுப்புரம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்ட மக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்படாமல் உள்ள மேம்பாலம் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் இடையே 194 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற சுமார் @#6,431 கோடி திட்ட மதிப்பீட்டுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இந்த 4 வழிச்சாலை திட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியிலிருந்து தொடங்குகிறது. இந்த திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், கடலூர் மாவட்டத்தில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தம் 134 கிராமங்கள் வழியாக கடக்கிறது.

இந்நிலையில் சாலை பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிந்த நிலையில் வளவனூர், கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த சாலை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், வாகன ஓட்டிகள் மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாலை போடப்பட்ட நிலையில் பல இடங்களில் சாலையில் திடீரென்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம், கோலியனூர் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் செல்லும் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சாலை பணிகள் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பள்ளம் தோண்டிவிட்டு மீண்டும் பேட்ச் ஒர்க் போல் சாலையை சீரமைத்து வருகிறது. புதிதாக போடப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராத நிலையில் இந்த சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகத்தில் விசாரித்தபோது பாலங்கள் அமைக்கப்பட்ட பகுதியில் மட்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சாலை பணிகள் ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து 6 பேர் கொண்ட குழு வருகை தர உள்ளதாகவும், அதன் பிறகு குறைகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்படும் என்று அரசு அதிகாரிகள் கூறினார்கள். அதன்படி டெல்லியில் இருந்து வந்த குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நிலையில் பேட்ச் ஒர்க் போடப்பட்ட இடங்களிலும் மீண்டும் விரிசல் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

The post சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திறந்து வைப்பதற்கு முன்பே சாலையை உடைத்து பேட்ச் வொர்க் ரூ.6,431 கோடியில் ஒன்றிய அரசு கட்டிய மேம்பாலத்தில் பல இடங்களில் விரிசல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Chennai-Trichy National Highway ,Villupuram ,India ,Dinakaran ,
× RELATED பைக் மீது கார் மோதி முதியவர் பரிதாப பலி: போலீசார் விசாரணை