×

தெருக்களில் உள்ள சாதி பெயர்களை அகற்றியதுபோல் அரசு பள்ளிகளில் சாதி பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்


சென்னை: தெருக்களில் உள்ள சாதி பெயரை அகற்றியதுபோல் அரசு பள்ளிகளில் உள்ள சாதி பெயரை அகற்றுங்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி நேர்காணல் ஒன்று அளித்த பேட்டியை அடிப்படையாக வைத்து கல்வராயன் மலை பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஆகியோரின் அறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள், இதில் கல்வராயன் மலைப்பகுதியில் அரசு பள்ளி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் எந்த அளவிற்கு உள்ளன என்று கூறப்படவில்லை. அது மட்டுமில்லாமல் பொத்தாம் பொதுவாக கடந்த 10 ஆண்டுகளில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன.

அவற்றை அகற்ற அரசு முன்வர வேண்டும். தெருப் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கியது போல அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சாதிய பெயர்களையும் அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் அரசு அதிகாரிகள் அடங்கிய குழு மீண்டும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இந்த குழுவுடன் உயர் நீதிமன்றத்திற்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்மணியை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அப்போது, பழங்குடியினத்தை சேர்ந்த தனக்கும் அந்த பகுதி குறித்து தெரியும். எனவே, தன்னையும் ஆய்வுக்கு செல்ல அனுமதி தரவேண்டும் என்று வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் ஆஜராகி கோரிக்கை வைத்து, பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக மாநில அரசு 9 கோடி 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது, ஆனால், அந்த தொகை செலவிடப்படவில்லை என்று கூறி அது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்தார். அதற்கு நீதிபதிகள் உங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அரசு குழுவிற்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தாமல் நீங்கள் தனியாக சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தனர்.

The post தெருக்களில் உள்ள சாதி பெயர்களை அகற்றியதுபோல் அரசு பள்ளிகளில் சாதி பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : High Court ,Tamil Nadu Govt. ,CHENNAI ,Madras High Court ,Tamilmani ,Kallakurichi ,Tamil Nadu government ,
× RELATED விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் தண்டனை...