×

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் நடைபெறும் 135 பணிகளும் 2025க்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

 

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் நடைபெறும் 135 பணிகளும் 2025க்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, அகரம், ஜெகந்நாதன் தெருவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மறுவாழ்வு மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையத்தினையும் (Kolathur Dialysis Centre), அகரம், ஜெகந்நாதன் தெருவில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பன்னோக்கு மையத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் புதிதாக அமையவுள்ள பகிர்ந்த பணியிட மையத்தினையும் (Co-working Space), கொளத்தூர்,

ரெட்ஹில்ஸ் ரோட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.23.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன சந்தையையும் (Kolathur Modern Market) மற்றும் கொளத்தூர், ரெட்ஹில்ஸ் ரோட்டில் அமையவுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் சி.எம்.டி.ஏ., சார்பில் பகிர்ந்த பணியிட மையம் என ஒருங்கிணைந்த மக்கள் சேவை மையத்திற்கான இடத்தினையும் (Kolathur Citizen Service Centre) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாடு முதலமைச்சர்-ஆக என்ற வாய்ப்பை வழங்கிய கொளத்தூர் சட்டமன்ற தொகுதி மக்கள் என்ற வகையில் அனைத்து தொகுதிகளுக்கும் தமிழக முதல்வர் என்றாலும் கொளத்தூர் தொகுதியை பொறுத்தளவில், எங்கள் வீட்டு தொகுதி என்ற வகையிலே இந்த தொகையின் மீது அதிக அக்கறை கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அந்த வகையில் இன்றைக்கு கொளத்தூர் பகுதி மக்கள் வருவாய் சம்பந்தப்பட்ட இனங்களுக்கு அணுக வேண்டும் என்றால், முதியோர் ஓய்வூதிய தொகை, அதேபோல் பொங்கலுக்கு தருகின்ற சிறப்பு பரிசுகள் சான்றிதழ்கள்,

வருமானச் சான்றிதழ் போன்றவர்களை பெறுவதற்கு அதிக தூரம் பயணிக்கின்ற நிலை இருந்ததால் தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று கொளத்தூர் என்று தனியாக ஒரு வட்டாட்சியர் அலுவலகம் உருவாவதற்கு அரசாணை பிறப்பித்திருக்கின்ற முதல்வர் நம் தமிழக முதல்வர். இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதை பெருமையோடு சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். வீடுகள் விற்பது வாங்குவது போன்ற பதிவுகளை செய்வதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதற்கு சப்-ரிஜிஸ்டர் ஆபீஸ் என்கின்ற அலுவலகத்திற்கு புதிதாக ஒரு கட்டடத்தை கட்டுவதற்கும் தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கின்றார். அந்த வகையில் இந்த பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்திருக்கின்ற ஒரு ஏக்கருக்கும் அதிகமான இந்த இடம் சமூக விரோத கும்பல்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் மீட்டு அந்த இடத்திலே வருவாய்த்துறைக்குண்டான வட்டாட்சியர் அலுவலகமும் அதே போல் சப்-ரிஜிஸ்டர் அலுவலகமும் மற்றும் வணிக வளாகங்களும் கட்டுவதற்கு எங்கள் துறையினுடைய செயலாளர் அன்பிற்கினிய காகர்லா உஷா, மேயர் ஆர். பிரியா ராஜன், பெருநகர் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே,

இந்த தொகுதியின் கண்காணிப்பு அலுவலர் அன்பிற்கினிய கணேசன், அதேபோல் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜெ.பிரவீன் குமார் மற்றும் மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார் ஆகியோரோடு இப்போது நாங்கள் இந்த இடத்தினை மேற்பார்வையிட்டோம். இந்த அனைத்து பணிகளையும் டிசம்பர் மாதம் 2025-க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குண்டான முனைப்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருக்கின்றோம். ஏழை எளிய மக்கள் தங்களுடைய படிப்பினை தொடர்வதற்கு வீட்டில் போதிய வசதி இல்லை என்ற காரணத்தினால் அவர்கள் தனியாக படிப்பதற்கும் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் அதேபோல் மாணவர்களுக்கும்,

பணிபுரிகின்ற இளைஞர்களுக்கு தனியாக பணி செய்வதற்குண்டான இடங்களையும் உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதற்கேற்ப அகரம், ஜெகந்நாதன் தெருவில் அமைய பெற்றிருக்கின்ற சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியோடு சென்னை பெருநகரத்தின் மூலநிதியோடு கட்டப்பட்டிருக்கின்ற அந்தக் கட்டிடத்தை ஆய்வு செய்தோம். அடுத்த மாதம் 25ம் தேதி முதலமைச்சர் அவர்களின் பொற்காரங்களால் அந்த கட்டிடத்தை திறந்து வைப்பதற்குண்டான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கட்டப்பட்டு வருகின்ற 4 புதிய மாநகராட்சி பள்ளிக்கூடங்களையும்,

அதேபோல் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டு வருகின்ற டயாலிசிஸ் சென்டர், 2 பேருந்து முனையங்கள், அதேபோல் வணிக வளாகங்கள் ஆகியவற்றையும் இன்றைக்கு கள ஆய்வு செய்தோம். இந்த பணிகள் அனைத்தும் 2025 ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 2023-24, 2024-25 ஆகிய 2 இரண்டு ஆண்டுகளில் சுமார் 100 அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்றோம். அந்த 100 அறிவிப்புகளில் 135 பணிகள் அடங்கியிருக்கின்றன, அந்த 135 பணிகளையும் டிசம்பர் 2025க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குண்டான முயற்சிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

சென்னை பெருநகரத்தின் உடைய வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் 4,378 கோடி ரூபாய் அளவிற்கு தமிழக முதல்வர் 218 பணிகளை அறிவித்திருக்கின்றார் அதில் 118 பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன மீதம் இருக்கின்ற நூறு பணிகளை தொடர்ந்து அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து அந்த பணிகளையும் மேற்கொண்டு இந்த எல்லா பணிகளையும் டிசம்பர் 2025க்குள் முடிக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் நேரடி கண்காணிப்பில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தை வைத்து, தொடர்ந்து பணிகளை முடக்கிக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் அந்த பணிகளும் டிசம்பர் 2025க்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் ஒன்றிணைந்து அந்த பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைகின்ற பொழுது நிச்சயமாக எப்பொழுதெல்லாம் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி வருகின்றது அதில் குறிப்பாக இன்றைய முதல்வர் கையில் எப்பொழுதெல்லாம் அதிகாரம் வருகின்றதோ, அப்போதெல்லாம் மாநகரத்தின் உடைய தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்பவராக நம் முதல்வர் அவர்கள் இருக்கின்றார். அந்த வகையில் இந்த பணிகள் நிறைவு பெறுகின்ற பொழுது நிச்சயமாக சென்னை பெருநகரத்தில் வசிக்கின்ற மக்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமையும் இவ்வாறு கூறினார்.

இந்த ஆய்வுகளின்போது சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ராஜன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் ப.கணேசன், மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜெ.பிரவீன் குமார், மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், சி.எம்.டி.ஏ தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் எஸ்.ருத்ரமூர்த்தி, அ.பாலசுப்ரமணியம், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல அலுவலர் ஏ.எஸ்.முருகன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

The post சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் நடைபெறும் 135 பணிகளும் 2025க்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Development Corporation ,Minister ,Shekharbabu ,Chennai ,Jagannathan Street ,Kolathur Assembly Constituency ,Akaram ,Chennai Metropolitan Development Group ,Dinakaran ,
× RELATED கார் ரேஸ் நடந்தபோது போக்குவரத்து இடையூறு இல்லை: அமைச்சர் சேகர்பாபு