×

ரூ.100 கோடி நில அபகரிப்பில் விஜயபாஸ்கருக்கு உடந்தை கைதான இன்ஸ்பெக்டருக்கு 2 நாள் போலீஸ் காவல்

கரூர்: ரூ.100 கோடி நில அபகரிப்பில் விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக கைதான இன்ஸ்பெக்டர் பிரித்விராஜிடம் 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கோர்ட் அனுமதி வழங்கியது. கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷிடம் ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது உறவினர் பிரவீன் (28), உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதை தொடர்ந்து வாங்கல் போலீசார் அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் வாங்கல் போலீசார், எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேற்று மாலை 4 மணியளவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி பரத்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனிடையே, வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீசார் நேற்றுமுன்தினம் கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து சேலம் சிறையில் இருந்து பிரித்விராஜ் பலத்த பாதுகாப்புடன் கரூர் நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து வரப்பட்டு, நீதிபதி பரத்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, 2 நாள் சிபிசிஐடி காவல் வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு இன்ஸ்பெக்டர் பிரித்விராஜை அழைத்து சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* வழக்கறிஞரிடம் விசாரணை
ரூ.100 கோடி நிலஅபகரிப்பு வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சார்லியை விசாரிப்பதற்காக சிபிசிஐடி போலீசார் நேற்றுமுன்தினம் இரவு சென்னையில் இருந்து கரூருக்கு அழைத்து வந்தனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்தது.

The post ரூ.100 கோடி நில அபகரிப்பில் விஜயபாஸ்கருக்கு உடந்தை கைதான இன்ஸ்பெக்டருக்கு 2 நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Tags : Vijayabaskar ,Karur ,CBCID ,Inspector ,Prithviraj ,Prakash ,Wangal Guppichipalayam, ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது