நாகர்கோவில், ஜூலை 25: கோவையில் நடைபெறும் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் நாகர்கோவில் பள்ளி மாணவர் 2 தங்க பதக்கம் உள்பட 4 பதக்கங்கள் வென்றுள்ளார். கோவை ஆயுதப்படை மற்றும் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு துப்பாக்கி சங்கம் மற்றும் கோவை ரைபிள் அசோசியேஷன் சார்பில், 49வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 21ம் தேதி வரை ரைபிள் போட்டிகள் நடைபெற்றன. 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை பிஸ்டல் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இப்போட்டியில், கோவை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1,650 பேர் பங்கேற்றுள்ளனர். ரைபிள் பிரிவு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதங்கங்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் நாகர்கோவில் ராஜாஸ் சர்வதேச பள்ளி 12ம் வகுப்பு மாணவர் சானியோ அக்ஷய் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் பங்கேற்று 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் பெற்றார். பதக்கங்களை கோவை விமானப்படை நிர்வாக கல்லூரி இயக்குநரும், ஏர் கமாண்டன்ட் விகாஸ் வாகி வழங்கினார். கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்க செயலாளர் வேல்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மாநில துப்பாக்கி சுடும் போட்டி நாகர்கோவில் மாணவருக்கு 2 தங்கம் உள்பட 4 பதக்கம் appeared first on Dinakaran.