×

பெண்கள் பாதுகாப்புக்கான அவசர தொலைபேசிக்கு 9 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழக பெண்கள் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர்கள் கனிமொழி மதி, செயலாளர் வாசுகி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள பேருந்து, ரயில் நிலையங்களில் பெண்களுக்கான காவல் நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க வேண்டும். பணி, கல்வி நிமித்தமாக நள்ளிரவில் நேரங்களில் பேருந்து, ரயில் நிலையம் வரக்கூடிய பெண்களுக்கு தங்குவதற்கு பாதுகாப்புடன் கூடிய விடுதிகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, மிகக் குறைந்த வாடகையில் பெண்கள் பாதுகாப்பாக தங்கும் வகையில் தோழி என்ற திட்டத்தின் கீழ் சென்னை, திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், தாம்பரம், அடையார் உள்ளிட்ட 10 இடங்களில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் பயோ மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் தங்குமிடங்கள் அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டான சூழலில் இருக்கும் பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் உடனடியாக 181 என்ற அரசின் அவசர அழைப்பு எண்ணுக்கு அழைத்தால் உரிய உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதோடு மருத்துவமனையில் 4 நாட்கள் தங்கி சிகிச்சை அளிப்பதற்கும், மன நல ஆலோசனைகள் பெறுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த அவசர எண்ணுக்கு இதுவரை 9 லட்சம் அவசர அழைப்புகள் வந்துள்ளனஎன்றார். இதற்கு மனுதாரர் தரப்பில், இந்த விவரங்கள் முறையாக விளம்பரப்படுத்தப்படவில்லை.

பெண்களுக்கு இதுகுறித்து விவரங்கள் முழுமையாக தெரிவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையரே தாமாக முன் வந்து வழக்கில் இணைத்து உத்தரவிட்டதோடு, பெண்கள் பாதுகாப்பிற்காக அரசு செய்ததாக தெரிவித்த திட்டங்களை, பெண்கள் எளிதில் பயன்படுத்த முடிகிறதா என்பது குறித்து மருத்துவமனை, தங்குமிடங்களில் ஆய்வு செய்து மனுதாரர் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post பெண்கள் பாதுகாப்புக்கான அவசர தொலைபேசிக்கு 9 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,ICourt ,CHENNAI ,Tamil Nadu Women's Movement ,Kanimozhi Mathi ,Vasuki ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சாலைகளில் திரியும் மனநலம்...