×

இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த கடல் அட்டை, இஞ்சி, மஞ்சள் பறிமுதல்

மண்டபம்: இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 180 கிலோ கடல் அட்டை, 650 கிலோ இஞ்சி, 400 கிலோ மஞ்சள் ஆகியவற்றை மரைன் போலீசார் இன்று காலை அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோரப் பகுதியில் இருந்து, இலங்கைக்கு சமையல் பொருட்கள் மற்றும் கடல் அட்டைகளை கடத்தப்போவதாக, தமிழக கடலோரப் பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், மண்டபம் மரைன் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் யாசர் மவுலானா தலைமையில், போலீசார் மண்டபத்தில் உள்ள வடக்கு கடற்கரைப் பகுதியில் நேற்று நள்ளிரவு ரோந்து சென்றனர். அப்போது, கடற்கரை அருகே அமைக்கப்பட்டிருந்த ஒரு தகரசெட்டில் போலீசார் சோதனை செய்தனர்.

அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக 180 கிலோ கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து தகரசெட் முழுவதும் சோதனை செய்தனர். இதில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் 400 கிலோ மஞ்சள், 650 கிலோ இஞ்சி ஆகியவற்றை சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இவைகள் அனைத்தையும் பறிமுதல் செய்த காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இவைகளின் மதிப்பு நமது நாட்டில் ரூ.4 லட்சம் எனவும், இலங்கையில் ரூ.8 லட்சம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தகர செட் உரிமையாளரான, மண்டபம் மேற்கு தெருவைச் சேர்ந்த கடாபி என்பவரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த இஞ்சி, மஞ்சளை மண்டபம் சுங்கத்துறையிடமும், கடல் அட்டையை வனத்துறையிடமும் போலீசார் ஒப்படைத்தனர்.

The post இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த கடல் அட்டை, இஞ்சி, மஞ்சள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Mandapam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை சேர்ந்த 8 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்