×

ஷபாலி பேட்டிங் அருமையாக இருந்தது: இந்திய கேப்டன் மந்தனா பேட்டி

தம்புல்லா: 9வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி.20 வடிவில் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் நேற்றிரவு நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா-நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன் குவித்தது. ஷபாலி வர்மா 81, தயாளன் ஹேமலதா 47 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய நேபாளம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களே எடுத்தது. இதனால் 82ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

லீக் சுற்றில் ஹாட்ரிக் வெற்றியுடன் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருது பெற்றார். இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்மிருதி மந்தனா வெற்றிக்கு பின் கூறுகையில், ஷபாலி பேட்டிங் செய்த விதம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. லீக் சுற்றை நாங்கள் நன்றாக முடித்தோம். அரையிறுதியில் நாங்கள் எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். அரையிறுதிக்கு முன் 2 நாள் இடைவெளி ஓய்வுக்கும், பயிற்சிக்கும் உதவும், என்றார்.

ஏ பிரிவில் 2 வெற்றியுடன் 2வது இடம் பிடித்த பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. லீக் சுற்று இன்றுடன் முடிகிறது. இன்று பி பிரிவில் வங்கதேசம்-மலேசியா, இலங்கை- தாய்லாந்து மோதுகின்றன. இதன் முடிவில் பி பிரிவில் 2வது இடம் பிடிக்கும் அணியுடன் வரும் 26ம் தேதி மதியம் 2 மணிக்கு அரையிறுதியில் இந்தியா மோதும். பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தும்.

The post ஷபாலி பேட்டிங் அருமையாக இருந்தது: இந்திய கேப்டன் மந்தனா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Shabali ,Mandana Petty ,Dambulla ,9th Women's Asia Cup cricket series ,Sri Lanka ,India ,Nepal ,Mandana ,Dinakaran ,
× RELATED இறுதியில் இன்று இந்தியா இலங்கை மோதல்:...