×

நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த முதல்வர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள் : கே.சி.வேணுகோபால் அறிவிப்பு!!

டெல்லி :நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த முதல்வர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், இ.கம்யூ., மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக எம்.பி.க்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சமாஜ்வாதி, திரிணாமுல் காங்., ஆம் ஆத்மி உள்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து, பதாகைகளை ஏந்தியபடி, தமிழகத்திற்கு நிதி எங்கே, பழிவாங்கும் ஒன்றிய அரசு போன்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “ஒன்றிய பட்ஜெட்டில் கூட்டாட்சி தத்துவத்தையே பாஜக அரசு புறக்கணித்துவிட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ஆந்திரா, பீகாருக்கு கூடுதல் நிதி கொடுத்ததை நாங்கள் ஆட்சேமிக்கவில்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கான நியாயத்தைத்தான் நாங்கள் கேட்கிறோம். அனைத்து மாநிலங்களுக்கும் நியாயமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசாங்கத்தை பாதுகாப்பதே ஒன்றிய பட்ஜெட்டின் ஒரே நோக்கமாக உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த முதல்வர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள். பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்பர்; ஆனால் வெளியில் போராட்டம் நடத்துவார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த முதல்வர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள் : கே.சி.வேணுகோபால் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : India Alliance ,Nidi Aayog ,K. C. Venugopal ,Delhi ,Congress General Secretary ,India ,EU ,Niti Aayog ,
× RELATED புதுக்கோட்டையில் வாக்காளர்களுக்கு...