×

35 நாட்களில் 89 மீனவர்கள் கைது; மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.! அன்புமணி வலியுறுத்தல்

சென்னை, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 89 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மீனவர்கள் தாங்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த பகுதிகளில்தான் மீன்பிடித்து வருகின்றனர் என்ற போதிலும், அவர்களை சிங்கள கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கண்டிக்கத்தக்கது. வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக விதிக்கப்பட்ட 2 மாத தடைக் காலம் முடிவடைந்து ஜூன் 16ம் தேதிதான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதன்பின் 35 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், இதுவரை 7 கட்டங்களில் மொத்தம் 89 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து கைது செய்தது மட்டுமின்றி, அவர்களை ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து 89 மீனவர்கள் சிறையில் வாடி வரும் நிலையில், அவர்களை நம்பியுள்ள குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடி கொண்டிருக்கின்றன.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் இனியும் தொடர கூடாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்டு தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக ஒன்றிய அரசுக்கு அனைத்து வழிகளிலும் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.

The post 35 நாட்களில் 89 மீனவர்கள் கைது; மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.! அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,BAMA ,President ,Nadu ,Sri Lankan Navy ,Chennai ,Twitter ,Rameswaram ,Bay of Bengal ,
× RELATED நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்