×

புதிதாக பணிகளில் சேரும் இளைஞர்களுக்கு அரசு தரப்பில் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் : ஒன்றிய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!!

டெல்லி : 2024-25-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 7வது முறையாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 3வது முறையாக பிரதமரான மோடி தலைமையிலான கூட்டணி அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பட்ஜெட் உரை:

*மோடி 3வது முறையாக பிரதமரான பின் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து 3வது முறையாக ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.எங்கள் கொள்கை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கைதான் இந்த வெற்றி; அதனை நிறைவேற்றுவோம்.

*நாட்டில் விலைவாசி விகிதம் கட்டுக்குள் உள்ளது.இந்தியாவில் பணவீக்கம் குறைவாகவே இருந்து வருகிறது.நாட்டின் பணவீக்கம் மேலும் குறைந்து 4%ஆக சரிவடையும். சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. நிச்சயமற்ற தன்மை உள்ளபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி பிரகாசமாகவே உள்ளது.

*ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை அடிப்படையாக கொண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய 9 முக்கிய அம்சங்களை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது.

*80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் ‘பிஎம் கரீப் அன்ன யோஜனா’ திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

*4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும். கல்வி, தொழில்திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*இளைஞர்களுக்காக 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கான பிரதமரின் 5 அம்சத் திட்ட அமலாக்கத்துக்கு
ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கல்வி ஆகியவை பிரதமரின் 5 அம்சத் திட்டத்தில் அடங்கும்!

*வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ரூ. 1.52 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் முன்னெடுப்பால் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள்.நிலக்கடலை, எள், சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் வகுக்கப்படும்.

*உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ரூ. 10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும். ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.

*பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக விடுதி மற்றும் குழந்தை பராமரிப்பகங்கள் ஏற்படுத்தப்படும்.

*வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டு, தொழில் உற்பத்தி துறையில் முதல்முறையாக பணிக்கு சேரும் ஊழியர்களுக்கு முதல் மாத ஊதியமாக ரூ.15000 நேரடியாக வங்கி கணக்கிற்கு வைப்பு தொகையாக செலுத்தப்படும்.

*பணிக்கு சேருபவர்களுக்கு முதல் 4 ஆண்டுகளுக்கு, தொழிலாளர்களுக்கான வைப்பு நிதி சந்தாவை அரசே செலுத்தும்.

*அனைத்து துறைகளிலும் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி சந்தாவில், ரூ. 3000 அரசே செலுத்தும்

*அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அமலாக்க மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத பயிர்களை அறிமுகப்படுத்த திட்டம் வகுக்கப்படும்.

*பருப்பு, எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவு பெற திட்டங்கள் முன்னெடுக்கப்படும். நாடு முழுவதும் 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்

*அடக்க விலையை காட்டிலும் 20% லாபத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. பருவ நிலையை தாக்குபிடித்து வளரும் 102 வகை புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

*பீகார், ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

*ஆந்திரா மாநில மறுசீரமைப்பு சிறப்புத் திட்டம் அனுமதிக்கப்பட்டு, அமராவதி நகர வளர்ச்சிக்கு ரூ.15000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*சென்னை-ஹைதராபாத்-விசாகப்பட்டினம் தொழில்வழித்தட திட்டம் செயல்படுத்தப்படும்.

*அனைவருக்கும் வீடு கட்டும் பிரதமரின் திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*9 முன்னுரிமை திட்டங்கள்
1. வேளாண் உற்பத்தி
2. வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு
3. அனைவரையும் உள்ளடக்கிய மனித வள மேம்பாடு
4. உற்பத்தி மற்றும் சேவைத்துறை
5. நகர்ப்புற வளர்ச்சி
6. எரிசக்தி பாதுகாப்பு
7. உள்கட்டமைப்பு
8. புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
9. புதிய தலைமுறை சீர்திருத்தங்கள்

*ரூ.26,000 கோடியில் பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்டவை அமைக்கப்படும்

*நாட்டின் ஊரக வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

*பெண் குழந்தைகள், பெண்கள் மேம்பாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ.2.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*நாடு முழுவதும் புதிதாக 12 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும்.

*தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை குடியிருப்பை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

*அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும்.உள்நாட்டில் உள்ள தாதுக்கள், கனிம வளங்களை மறுசுழற்சி செய்யும் வகையில் புதிய திட்டம்.

*புதிய சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். திவாலான நிதி நிறுவனங்களிடம் இருந்து மக்களுக்கு பணத்தை பெற்றுத்தர ஆணையம் அமைக்கப்படும்

*மாநில அரசு, வங்கிகளுடன் இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம்.

*உள்நாட்டு உற்பத்தியில் 3.4% உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒதுக்க்கப்பட்டது.

*நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு மேலும் ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*பீகார் மாநில வெள்ள தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

*பீகாரில் 2400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி ஒதுக்கப்பட்டது.

*63,000 கிராமங்களில் வசிக்கும் 5 கோடி பழங்குடியின மக்களுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

*25,000 ஊரக வாழ்விடங்களை இணைக்கும் வகையில் கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

*வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், இமாச்சல், சிக்கிம் உத்தரகாண்ட் மாநிலங்களில் மறுகட்டமைப்பு மேற்கொள்ள நிதி வழங்கப்படும்.

*நகர்புறங்களில் ஒரு கோடி ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு வீட்டு வசதி திட்டத்திற்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி வீடுகளில் சூரியஒளி மின்சார வசதி ஏற்படுத்தப்படும்.

*பீகாரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 2 கோயில்களுக்கு வழித்தடங்கள் மேம்படுத்தப்படும். கயாவில் உள்ள விஷ்ணு கோயில் மற்றும் புத்த கயாவில் உள்ள மகா போதி கோயில்களுக்கான வழித்தடங்கள் மேம்படுத்தப்படும்.

*விண்வெளி ஆராய்ச்சி | திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தியாவில் உள்ள 500 டாப் நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு மாதம் ₹5000 ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும்.

*ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்படும். சிறு, குறு தொழில் (MSME) நிறுவனங்களின் |வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு!

*கிழக்கு மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட், மே.வங்கம், ஒடிசா, ஆந்திராவை மேம்படுத்த தனித் திட்டம் வகுக்கப்படும். பாட்னா-பூர்னியா விரைவுச் சாலை, பக்சால்-பாகல்பூர் விரைவுச் சாலை, புத்தகயா-வைசாலி சாலை கட்டப்படும். விரைவுச் சாலைகள் மற்றும் கங்கை நதியில் ரூ.26,000 கோடியில் 2 பாலங்கள் அமைக்கப்படும்.

*ரூ.3 லட்சம் வரை வருமான வரி இல்லை, ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை 5% வருமானவரி செலுத்த வேண்டும்.ரூ.7 முதல் ரூ.10 லட்சம் வரை 10%, ரூ.10 முதல் ரூ.12 லட்சம் வரை 15% வருமானவரி செலுத்த வேண்டும். ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20%, ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வருமான வரி செலுத்த வேண்டும். திருத்தப்பட்ட வரி விகிதங்களின்படி மாத ஊதியதாரர்களுக்கு வருமானவரி வகையில் ரூ.17,500 வரை மிச்சமாகும்.

*தனிநபர் வருமானவரிச் சலுகையில் நிலையான கழிவு ரூ.75,000ஆக அதிகரிப்பு . தனிநபர் வருமானவரிச் சலுகையில் நிலையான கழிவு ரூ.50,000-லிருந்து ரூ.75,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

*புற்றுநோய் சிகிச்சை தொடர்பான 3 மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

*தொழில் முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுகிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் திரட்டும் மூலதனத்திற்கு ஏஞ்சல் வரி விதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

*தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% -ல் இருந்து 6% ஆக குறைக்கப்படும். பிளாட்டினம் மீதான சுங்கவரி 15.4%-ல் இருந்து 6.5%ஆக குறைப்பு..!

*இணைய வழி வணிக நிறுவனங்களுக்கான TDS 0.1 சதவீதமாக குறைப்பு.

*வருமான வரி தாக்கல் செய்வதில் கால தாமதம் ஆவது குற்றம் அல்ல .

*தாமிரம் மற்றும் உருக்கு இறக்குமதி வரிகளும் குறைக்கப்படும். செல்போன் உதிரிபாகங்கள், சார்ஜர்கள் மீதான சுங்கவரி 15%ஆக குறைப்பு. இறால் உணவு, மீன் உணவு மீதான இறக்குமதி வரி 5%ஆக குறைப்பு. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக பிளாஸ்டிக் மீதான கங்கவரி 25% அதிகரிப்பு. ஆண்டுக்கு ரூ.1.2 லட்சம் வரை மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

*வெளிநாட்டு நிறுவனங்களின் லாபம் மீதான வரி 40%லிருந்து 35%ஆக குறைப்பு.

*2024-25 நிதியாண்டுக்கான மூலதன செலவினத்துக்கு ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு; 2024-25 நிதியாண்டிற்கான கடன் அல்லாத மொத்த வரவுகள் ரூ.2.07 லட்சம் கோடியாக மதிப்பீடு;மொத்த செலவு ரூ.48.21 லட்சம் கோடி; நிகர வரி வரவு ரூ.25.83 லட்சம் கோடி; நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9% ஆக கணக்கீடு!

*உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு நீண்ட கால வட்டியில்லா கடன் வழங்க ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் விதிகள் எளிமையாக்கப்படும்

*தொழில் தொடங்குவதை எளிதாக்க ஜன்விஷ்வாஸ் 2.0 மசோதா கொண்டுவரப்படும்

The post புதிதாக பணிகளில் சேரும் இளைஞர்களுக்கு அரசு தரப்பில் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் : ஒன்றிய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!! appeared first on Dinakaran.

Tags : Union ,Delhi ,Union Government ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Modi ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது...