×

‘மக்களின் மனுக்கள் கண்ணீர் துளிகள்’ பொறுமையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும்

*அதிகாரிகளுக்கு புதிய கலெக்டர் உத்தரவு

தஞ்சாவூர் : மக்கள் வழங்கும் மனுக்கள் ஒவ்வொன்றும் கண்ணீர் துளிகள் பொறுமையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு புதிய கலெக்டர் பிரியங்கா உத்தரவிட்டார்.தஞ்சாவூர் மாவட்டத்தின் 172வது புதிய ஆட்சித் தலைவராக பிரியங்கா பங்கஜம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தஞ்சாவூர் மாவட்ட இரண்டாவது பெண் ஆட்சியர். இவர், கடந்த 2015ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்வாகி கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.

அதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் சார் ஆட்சியராகவும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் சார் ஆட்சியராகவும் பணியாற்றி மதுரை மாவட்டத்தில் கூடுதல் இயக்குனர் வளர்ச்சி மற்றும் செயல் இயக்குனராக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தில் பணியாற்றியுள்ளார்.

பொறுப்பேற்றபின் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தஞ்சாவூர் விவசாய பகுதி நிறைந்த மாவட்டமாகும். எனவே இந்த பகுதியில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவேன். ‘மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்’ ‘மக்களுடன் முதல்வர்’ ‘உங்கள் ஊரில் முதல்வர்’ திட்ட முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீது அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்துக்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கொடுக்கும் ஒவ்வொரு மனுக்களிலும் ஆயிரம் கண்ணீர் துளிகள் உள்ளன. எனவே அதிகாரிகள் அனைவரும் சிரித்த முகத்துடன் பணிகளை செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் ஒரே மனுக்கள் வருவதை தடுக்கவேண்டும். அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வரும் மனுக்களை யாரும் நிராகரிக்காமல் அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? இல்லையா? என்பதை மனுதாரரிடம் கேட்கவேண்டும். ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் அதை மக்களுக்கு பொருமையுடன் எடுத்துச் சொல்லி விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மாற்றுத் திறனாளிக ளுக்கு காதொலி கருவி: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதுவே புதிய மாவட்ட ஆட்சியரின் முதல் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆகும்.தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை. குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினார்கள். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக அலுவலர்களுக்கு மாவட்ட மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்கள். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 மாற்றித்திறனாளிகளுக்கு தலா ரூ.4250 மதிப்பில் காதொலிக் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்கள்.

இதில் உதவி ஆட்சியர் உத்கர்ஷ் குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாக மற்றும் இயக்குநர் ரவிச்சந்திரன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) (பொ), உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ‘மக்களின் மனுக்கள் கண்ணீர் துளிகள்’ பொறுமையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : THANJAVUR ,PRIYANKA ,Priyanka Pankaj ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் எம்.பி., எம்.எல்.ஏ பங்கேற்பு...