×

‘கள்’ விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து ஏன் பரிசீலிக்க கூடாது? அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என்று விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் முரளிதரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், டாஸ்மாக் மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டிருக்கும் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என்று எல்லா டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும்.

கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, சூப்பர் மார்க்கெட்டுகள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும். கள் விற்பனைக்கு தடை விதித்து 1986ல் மதுவிலக்கு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தையும், டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்வதற்கு அனுமதித்து 2003ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு, மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்டுகள், ரேஷன் கடைகளில் விற்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதேசமயம் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க முடியாத ஏழை மக்களுக்காக கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது? என்று கேள்வி எழுப்பி விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post ‘கள்’ விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து ஏன் பரிசீலிக்க கூடாது? அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu government ,Tamil Nadu ,Muralitharan ,Court ,Dinakaran ,
× RELATED விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் தண்டனை...