×

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*குளுகுளு சீசனால் உற்சாகம்

சேந்தமங்கலம் : கொல்லிமலையில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர். குளுகுளு சீசனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலத்திற்கு, தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சனி, ஞாயிறு வாரவிடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, சினி பால்ஸ், சந்தன பாறை அருவிகளில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர். கொல்லிமலையின் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. மலைப்பாதையில் பனிமூட்டம் நிலவுவதால், கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர்.

தற்போது இதமான சூழலுடன், குளுகுளு சீசன் தொடங்கியுள்ளதால் பகல் நேரத்தில் குளிர் காற்று வீச தொடங்கியுள்ளது. மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் மேகக் கூட்டங்கள் கடந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கொண்டை ஊசி வளைவுகளில் பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். காலை வேளையில் பசுமையான மலைகளில் வெண் போர்வை போர்த்தியது போல் மேக கூட்டங்கள் மலைகளைக் மெதுவாக கடந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

நேற்று குரு பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில்களில் சாமிதரிசனம் செய்துவிட்டு தாவரவியல் பூங்கா, சீக்குப்பாறை காட்சி முனையம், படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கண்டு ரசித்தனர். வீடு திரும்பும் பொழுது சோளக்காடு, தெம்பளம், திண்டு பகுதிகளில் உள்ள பழச்சந்தையில் மிளகு, தேன், அன்னாசி, கொய்யா, மலை வாழைப்பழம், பலாக்களை வாங்கிச் சென்றனர்.

The post கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Kollimalay ,Glukulu ,Senthamangalam ,Kollimalai ,Tamil Nadu ,Andhra Pradesh ,Kerala ,Namakkal district ,
× RELATED குளத்தில் அனுமதியின்றி மண் வெட்டி கடத்திய 2 பேர் கைது