×

அதிக மழைப்பொழிவு இருக்கும் போது ஆற்றில் குளிப்பது, நீந்தி கடப்பது செயல்களில் ஈடுபட கூடாது

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் போது பொதுமக்கள் நீரோடை, ஆறுகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். மேலும் ஆற்றில் குளிப்பது, வாகனங்களில் கடந்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்படுவதால் நீரோடைகள் நிரம்பி திடீர் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாததால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

அத்தகைய சமயங்களில் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதன்படி அதிக மழைபொழிவு ஏற்படும் போது பொதுமக்கள் நீரோடைகளுக்கு அருகில் செல்லவோ, அருகில் நடக்கவோ கூடாது. ஆற்றில் குளிக்கவோ, ஆற்றினை தனியாகவோ அல்லது வாகனங்கள் மூலம் கடக்கவோ கூடாது.

குழந்தைகளை வெள்ளநீரில் விளையாட அனுமதிக்க கூடாது. ஓடும் நீரில் நடக்க வேண்டாம். ஏனெனில் நீரோட்டமானது, ஆழமற்றது போல் தோற்றமளிக்கலாம். ஆனால் வேகமாக ஓடுகின்ற நீர் உமது கால்களை இடறி விடலாம். வேகமாக ஓடும் நீரில் நீந்த வேண்டாம். ஏனெனில் அந்நீரால் அடித்து செல்லப்படலாம் அல்லது நீரில் உள்ள பொருளின் மீது மோதிக்கொள்ள நேரிடலாம். நீலகிரி மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவின் போது நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் அத்தகைய நேரங்களில் அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற நேரங்களில் வெளியிடங்களுக்கு செலவதை தவிர்க்க வேண்டும்.

வாகனங்களை மரங்களின் அடியிலோ, தடுப்பு சுவர்களின் அருகிலோ நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிக மழை பொழிவின் போது மின்கம்பங்கள் சாயவும், மின் கம்பிகள் அறுந்து விழவும் வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் அத்தகைய சூழ்நிலையில் மின்கம்பங்கள், மின் கம்பிகள் ஆகியவற்றை தொடவோ அருகில் செல்லவோ முயற்சிக்க கூடாது. நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் பொதுமக்க்ள மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது 24X7 முறையில் இயங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுபாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இதேபோல் ஆர்டிஓ அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன்படி ஊட்டி ஆர்டிஓ அலுவலகம் 0423-2445577, குன்னூர் ஆர்டிஓ அலுவலகம் 0423-2206002, கூடலூர் ஆர்டிஓ அலுவலகம் 04262-261295 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஊட்டி வட்டம் 0423-2442433, குன்னூர் வட்டம் 0423-2206102, கோத்தகிரி வட்டம் 04266-271718, குந்தா வட்டம் 0423-2508123, கூடலூர் வட்டம் – 04262-261252, பந்தலூர் வட்டம் 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். பெறப்பட்ட தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். மாவட்ட நிர்வாகம் எவ்வித இயற்கை சீற்றத்தையும் எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி விழிப்புடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

The post அதிக மழைப்பொழிவு இருக்கும் போது ஆற்றில் குளிப்பது, நீந்தி கடப்பது செயல்களில் ஈடுபட கூடாது appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு பேருந்து கடத்தல்