×

ரூ.541.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.541.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 382 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தல்
அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சென்னையில் கார்கில் நகர் திட்டப்பகுதியில் தூண் மற்றும் 15 தளங்களுடன் 190 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 1200 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருச்சினாங்குப்பம் பகுதி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 35 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் 360 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகர் பகுதி – 2 திட்டப்பகுதியில் தூண் மற்றும் 14 தளங்களுடன் 226 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் 1792 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;

தேனி மாவட்டம், தம்மணம்பட்டி திட்டப்பகுதியில் 29 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 264 குடியிருப்புகள் மற்றும் 36 தரைத்தள குடியிருப்புகள்; புதுக்கோட்டை மாவட்டம், பாலன்நகர் பகுதி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 23 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் 256 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கறம்பக்குடி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 10 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் 96 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;

நீலகிரி மாவட்டம், அல்லாஞ்சி திட்டப்பகுதியில் தரை மற்றும் ஒரு தளத்துடன் 24 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் 180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; என மொத்தம் 541 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4184 குடியிருப்புகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இன்றைய தினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ள இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. “நம் குடியிருப்பு, நம் பொறுப்பு” திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் திறந்து வைத்தல்

தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்பு திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 344 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1387 அடுக்குமாடி குடியிருப்புகள், அரியலூர் மாவட்டம், அரியலூரில் 19 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 72 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சென்னை மாவட்டம், அசோகா காலனியில் 19 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம்; என மொத்தம் 382 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சு. முத்துசாமி, அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சு.பிரபாகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கீ.சு.சமீரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

The post ரூ.541.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Tamil Nadu Urban Habitat Development Board ,Tamil Nadu Housing Board ,CM ,Stalin ,Dinakaran ,
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்